சென்னை அருகே 3 அமைச்சர்களால் திறந்து வைக்கப்பட்ட பாலம் மூன்றாவது நாளில் சேதம்!
சென்னை: திருவள்ளூர் அருகே, ரூ.90 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு, மூன்று அமைச்சர்களால் திறந்து வைத்த தரைப்பாலம் 3ம் நாளிலேயே மீண்டும் சேதமடைந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையடுத்த, திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள புதுச்சத்திரம் கிராமத்திலிருந்து, திருநின்றவூர், பெரியபாளையத்தை இணைக்க, கூவம் ஆற்றின் குறுக்கே, 1968ல் தரைப்பாலம் கட்டப்பட்டது.

கன மழையால், கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், தரைப்பாலத்தின் இரு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சேதமானது. சுமார் ஒருமாதமாக பாலத்தில் போக்குவரத்து தடைபட்டது.
மழை நின்றதால், கடந்த 8ம் தேதிமுதல் பாலத்தை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர். உடைப்பு ஏற்பட்ட இடத்தில், 13 ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு, நடுவில் மணல் மூட்டைகளை அடுக்கி, கிராவல் மண் கொட்டி, பாலத்தை ரூ.90 லட்சம் செலவில் சீரமைத்தனர்.
கடந்த 17ம் தேதி நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாவட்ட அமைச்சர்கள் ரமணா, அப்துல் ரஹீம், கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் பாலத்தில் போக்குவரத்தை மீண்டும் துவக்கி வைத்தனர். பஸ்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது. லாரிகள் போன்ற கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், போக்குவரத்தை துவக்கிய 3வது நாளிலேயே சீரமைக்கப்பட்ட தரைப்பாலம் மீண்டும் சேதமாகியுள்ளது. இது வாகன ஓட்டிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இதையடுத்து போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டு, பொக்லைன் மூலம், பெரிய பைப்புகளை புதைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மீண்டும் அவதியில் உள்ளனர். பாலத்திற்கு செலவிட்ட தொகை கணக்கில் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications