கேப்டன் தலைமையில் கூட்டணி... வர்றவங்க வாங்க... கூப்பிடும் பிரேமலதா!
வேலூர்: சட்டசபை தேர்தலுக்கு, விஜயகாந்த் தலைமையில் ஒரு கூட்டணி அமையும். அந்த அணி கட்டாயம் வெற்றி பெறும். விஜயகாந்த் தலைமையில், புதிய ஆட்சி அமையும் என்று தே.மு.தி.க., மகளிர் அணி தலைவி பிரேமலதா கூறியுள்ளார்.
'யாரிடமோ சூட்கேஸ் வாங்கிக் கொண்டு கருத்து கணிப்பை நடத்தி, முடிவுகளை பொய்யாக வெளியிடுகின்றனர், என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வேலுார் மாவட்ட, தே.மு.தி.க., சார்பில், மக்களுக்காக மக்கள் பணியில், நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, திருப்பத்துாரில் நடந்தது. விஜயகாந்த் தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய பிரேமலதா ஆரம்பத்திலேயே டாப் கியரில் ஆரம்பித்தார்.

நேரடி ஒளிபரப்பு
சட்டசபைக்கு விஜயகாந்த் வந்தால், ஜெயலலிதா மிரண்டு போகிறார்.
'விஜயகாந்த் ஏன் சட்டசபைக்கு வருவதில்லை' என, பத்திரிகையாளர்கள் கேட்கின்றனர். சட்டசபையில் நடப்பதை நேரடி ஒளிபரப்பு செய்தால், சபையில் நடப்பது அனைத்தும், அப்படியே மக்களுக்கு சென்று சேரும்.அப்படியொரு சூழ்நிலை உருவானால், முதல் ஆளாக விஜயகாந்த், சட்டசபைக்கு வருவார்.

கருத்துக்கணிப்பு
சில நாட்களுக்கு முன், தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக, கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. அதில், அடுத்த முதல்வராக, ஜெயலலிதாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும்; அதற்கு அடுத்ததாக ஸ்டாலின், கருணாநிதிக்கு வாய்ப்பு இருப்பதாகவும்; விஜயகாந்துக்கு வெறும், 6 சதவீதம் தான் வாய்ப்பு எனவும் சொல்லி உள்ளனர்.இதற்காக, யாரிடம் சூட்கேஸ் வாங்கினார்களோ தெரியவில்லை.

வாக்கு வங்கி
2006 தேர்தலில், நாங்கள் தனித்து போட்டியிட்டு, 8.23 சதவீத ஓட்டுகளைப் பெற்றிருக்கிறோம்; அதன் பின், 10 சதவீதம் பெற்றிருக்கிறோம். ஆனால் இப்போது, தே.மு.தி.க.,விற்கு 4 சதவீத ஓட்டு தான் உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

கேப்டன் தலைமையில்
சட்டசபை தேர்தலுக்கு, விஜயகாந்த் தலைமையில் ஒரு கூட்டணி அமையும். அந்த அணி கட்டாயம் வெற்றி பெறும். விஜயகாந்த் தலைமையில், புதிய ஆட்சி அமையும். தி.மு.க., ஆரம்பித்த திட்டங்களையெல்லாம், அ.தி.மு.க., அரசு மூடிவிட்டது. ஆனால், 'டாஸ்மாக்'கை மட்டும் மூடவில்லை.

தாலி பறிப்பு
பெண்களின் தாலிக்கு தங்கம் கொடுக்கும் அதிமுக அரசுதான் டாஸ்மாக்கை திறந்து வைத்து அதே தாலியை பறிக்கிறது. கொடநாடு செல்லும் வழியில் உள்ள ஒரு பள்ளியை மூடிவிட்டு, அதில், வெளிநாட்டு உயர்ரக மதுக்கடையை திறந்துள்ளனர்.

மொபைல் ரேசன் கார்டு
தே.மு.தி.க., ஆட்சிக்கு வந்தால், நரிக்குறவர்களுக்கு, 'மொபைல், ரேஷன் கார்டு' வழங்கப்படும். அவர்கள் எந்த ஊருக்கு சென்றாலும், ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்றும் கூறி முடித்தார் பிரேமலதா.












Click it and Unblock the Notifications