5 ஆண்டு ஆகியும் முடியாத செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை பணி - டென்ஷனில் பயணிகள்
நெல்லை: செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை பணி 5 ஆண்டுகள் ஆகியும் முடிவடையவில்லை. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
செங்கோட்டை-புனலூர் இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி கொண்டிருந்த மீட்டர்கேஜ் ரயில் கடந்த 2010 செப்டம்பர் மாதம் நிறுத்தப்பட்டது. ரூ.355 கோடியில் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் இந்த ஆண்டுடன் முடிக்கப்பட்டு 2017 ஜனவரி முதல் ரயில் போக்குவரத்து நடைபெறும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

மொத்தம் 59 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகல பாதை செல்லும் வழியில் சிறிய பாலங்கள், 3 பெரிய பாலங்கள், 5 குகைகள் அமைக்கும் பணிகளும் அடக்கம். இரும்பு பாதை அமைத்தல், மலை குகைகளை அகலப்படுத்துதல், சமதளத்தை விரிவுப்படுத்துதல் என்ற வகையில் 3 பிரிவாக பிரித்து வேலை நடந்து வருகிறது. ஆனால் 5 ஆண்டுகளாகியும் இந்த மூன்று பிரிவு பணிகளில் எந்த பிரிவும் முழுமை அடையவில்லை.
தற்போது தொடர்ச்சியாக பெய்த பருவமழையால் அகல பாதையில் பணியில் ஈடுபட்ட ஓப்பந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று வி்ட்டனர். இதனால் பணிகள் தொய்வடைந்த நிலையில் உள்ளன. மழை முடிந்து ஒரு வாரம் முடிந்த நிலையிலும் இதுவரை யாரும் பணிக்கு வரவில்லை.
செங்கோட்டை முதல் புனலூர் வரை 2 வருடங்களுக்கு முன்பு ஸ்லிப்பர்கட்டைகள் போடப்பட்டன. தற்போது அவற்றின் மீது புல்புதர்களும், செடிகளும், கொடிகளும் படர்ந்து காணப்படுகிறது. இந்த வழித்தடம் போதிய வருமானம் இல்லாத வழித்தடம் என்பதால் போதிய நிதி ஓதுக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதனால் கேரள செல்லும் சுற்றுலா பயணிகளும், வேலை நிமித்தமாக இங்கு வருவோரும், தமிழகத்தில் இருந்து கேரளா செல்வோரும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications