திருவள்ளூரில் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை
திருவள்ளூர்: தொழில் போட்டி காரணமாக, பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலர், கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம், மாதவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலையான நபரின் பெயர் முரளி(35). மாதவரம் திடீர் நகரைச் சேர்ந்த இவரை போத்தீஸ் முரளி என்றும் அழைக்கின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஆக பதவி வகித்து வந்த முரளி, மாதவரம் லாரி வணிக வளாகத்தில் உள்ள கிடங்குகளில், சுமை துாக்கும் தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில், பணிக்கு அனுப்புவது, ரியல் எஸ்டேட் தொழில் உள்ளிட்டவற்றையும் அவர் செய்து வந்தார்.
திங்கட்கிழமையன்று காலை 11.00 மணியளவில், திடீர் நகர் திருவள்ளுவர் தெருவில் ஆலம், என்ற பெண்ணின் வீட்டருகே முரளி நின்று இருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தியாகு, ரஞ்சித் உட்பட, எட்டு பேர் கொண்ட கும்பல், முரளியை சுற்றி வளைத்தது. அவர்களிடம் இருந்து முரளி தப்ப முயன்றார்.ஆனால், அவரை கத்தி, அரிவாளால் சரமாரியாக கும்பல் வெட்டியது. நாட்டு வெடிகுண்டுகளை அவர் மீது வீசிவிட்டு கும்பல் தப்பியது. இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் முரளி உயிரிழந்தார்.
நிலுவையில் 8 வழக்குகள்
ஆலம் என்ற பெண், மாதவரத்தைச் சேர்ந்த ஒருவரின் மனைவி. கருத்து வேறுபாட்டால், கணவனிடம், எட்டு ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்றவர். திருமணமாகாத முரளி, ஆலத்துடன், குடும்பம் நடத்தி வந்தார். முரளி மீது, மாதவரம் உட்பட, சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில், எட்டுக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
போத்தீஸ் முரளி
கடந்த 2010ம் ஆண்டு, சென்னை 'போத்தீஸ்' துணி கடை ஊழியர்கள், வங்கிக்கு எடுத்து சென்ற, 90 லட்சம் ரூபாயை கொள்ளைஅடித்த கும்பலில் முரளி முக்கிய நபராக செயல்பட்டு உள்ளார். அந்த வழக்கில் கைதான பின்தான், அவருக்கு 'போத்தீஸ்' முரளி என்ற பெயர் வந்தது.
வெட்டிக்கொன்ற முரளி
மாதவரம் லாரி வளாகத்தில், பெரம்பூர் மடுமா நகரைச் சேர்ந்த முருகன், 46, என்பவர் 'புக்கிங்' அலுவலகம் நடத்தி வந்தார். லாரி வளாக கிடங்குகளில், ஒப்பந்த அடிப்படையில் சுமை துாக்கும் தொழிலாளர்களை பணியமர்த்தும் தொழில் செய்து வந்தார். தொழில் போட்டியால், 2013, ஜூன் மாதம் முருகன் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். அந்த வழக்கிலும் முரளி சிக்கினார்.
பகுஜன் சமாஜ் கட்சியில்
கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில், அவர் அடிக்கடி சிக்கி வந்தார். இந்த நிலையில், அவர், தன் பாதுகாப்பிற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலராக பொறுப்பு பெற்றதாக, விசாரணையில் தெரிந்தது.
தொழில் போட்டி
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், திடீர் நகரில் வசிக்கும் முரளியின் நெருங்கிய உறவினரான தியாகுவிற்கும், முரளிக்கும் தொழில் போட்டியால் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, தியாகு, மாதவரம் போலீசில் புகார் செய்தார். இருவரையும் விசாரித்த போலீசார், அவர்கள் உறவினர்கள் என்பதால், எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
தொழில் போட்டி
நேற்று காலை தியாகு, ரஞ்சித் உட்பட எட்டு பேர், முரளியை வெட்டி சாய்த்துள்ளனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்த உடன் மாதவரம், மணலி, செங்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், தொழில் போட்டியால் முரளி கொல்லப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, திடீர் நகரில் முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டனர்.
பதற்றம் அதிகரிப்பு
முரளி கொல்லப்பட்ட தகவல் பரவியதும், அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள் ஒன்று திரண்டு, தியாகு, ரஞ்சித் ஆகியோரின் வீடுகளுக்கு சென்று தேடினர். அவர்கள் அங்கு இல்லாததால், வீடுகளை அடித்து நொறுக்கி பொருட்களை சூறையாடினர். இதனால், பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை விரட்டியடித்தனர்.