போலீஸ் தடையை மீறி எருது விடும் விழா.. திருவண்ணாமலை அருகே பரபரப்பு
திருவண்ணாமலை அருகே போலீசாரின் தடையை மீறி எருது விடும் விழா நடைபெற்றது இதனை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.
திருவண்ணாமலை: செங்கம் அருகே போலீசாரின் தடையை மீறி எருது விடும் விழா நடைபெற்றது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.
செங்கம் அருகே எருது விடும் விழா நடத்த அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி போலீசார் உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி எருது விடும் விழா நடத்த அனுமதி மறுத்தனர்.
ஆனால் போலீசாரின் தடையை மீறி கிராம மக்கள் எருது விடும் விழா நடத்தினர். இதனை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் போலீசாரைக் கண்டித்து சாலை மறியல் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து வீரலூர், சோழனங்குப்பம் ஆகிய கிராமங்களில் போலீசாரின் தடையை மீறி எருதுவிடும் விழா நடைபெற்றது. கயிற்றிலிருந்து கழற்றிவிடப்பட்ட எருதுகள் அங்கும் இங்குமாக பாய்ந்து ஓடியதை மாடு பிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு பாணியில் விரட்டிச் சென்றனர்.
இதனை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர். போலீசாரின் தடையை மீறி நடைபெற்ற எருது விடும் விழாவால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.