தொடரும் உயிரிழப்புகள்.. ஊதிய உயர்வு கிடைக்காத விரக்தியில் போக்குவரத்து தொழிலாளி மரணம்
ஊதிய உயர்வு கிடைக்காத விரக்தியில் அரசு போக்குவரத்து தொழிலாளர் வெங்கடேசன் மரணம் அடைந்து இருக்கிறார்.
சென்னை: ஊதிய உயர்வு கிடைக்காத விரக்தியில் அரசு போக்குவரத்து தொழிலாளர் வெங்கடேசன் மரணம் அடைந்து இருக்கிறார். போராட்டம் காரணமாக இதோடு 4வது போக்குவரத்து ஊழியர் மரணம் அடைகிறார்.
தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதியில் தமிழகம் முழுக்க போராட்டம் செய்து வருகின்றனர். ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இவர்கள் போராடுகிறார்கள். போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் 8 வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த நிலையில் இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணம் கேட்டு தமிழக அரசு அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நோட்டிஸ் அனுப்பியது. இந்த நோட்டிஸை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் மைலம்பாடியை சேர்ந்த அரசு பேருந்து ஒட்டுநர் தேவராஜ் அதிர்ச்சியில் மரணம் அடைந்து இருக்கிறார். நோட்டீஸை பார்த்ததும் அவருக்கு மாரடைப்பு வந்ததாக கூறப்படுகிறது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தையை சேர்ந்தவர் கணேசன், 50. இவர் நோட்டீஸை பார்த்த அதிர்ச்சியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். மேலும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அரசு பஸ் கண்டக்டர் செந்தில் என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் ஊதிய உயர்வு கிடைக்காத விரக்தியில் அரசு போக்குவரத்து தொழிலாளர் வெங்கடேசன் இன்று மரணம் அடைந்து இருக்கிறார். விரக்தியில் மாரடைப்பு வந்து வெங்கடேசன் உயிரிழந்தார் என கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர் வெங்கடேசன் திருச்சி மாவட்டம் கல்லணையை சேர்ந்தவர். போராட்டம் காரணமாக இதோடு 4வது போக்குவரத்து ஊழியர் மரணம் அடைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications