2 ஆண்டுக்குப் பின்னர் இடிந்தகரைக்கு பொங்கல் முதல் பஸ் போக்குவரத்து தொடக்கம்
நெல்லை: இடிந்த கரை மீனவர் கிராமத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பொங்கல் பண்டிகை முதல் பேருந்து போக்குவரத்து தொடங்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ஆயிரம் மெகா வாட் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அணு உலைக்கு எதிராக அந்தப் பகுதி கடலோர கிராம மக்கள் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடுமையான போராட்டங்களை நடத்தினர்.
இந்த போராட்டத்தினை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் 2 ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து நடந்தி வருகின்றனர்.
இடிந்தகரையில் லூர்து மாதா ஆலயத்தில் பந்தல் அமைத்து அதில் தான் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இடிந்தகரைக்கு பஸ் வசதி முடக்கப்பட்டன.
இந்நிலையில் மீண்டும் பேருந்தை விட கோரி நெல்லை கலெக்டரிடம் விஜயாபதி பஞ்சாயத்துத் தலைவர் மனு கொடுத்தார். இதை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு இடிந்தகரை பகுதிக்கு பஸ்சை இயக்க மாவட்ட கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கூடங்குளத்தில அணு உலைக்கு எதிராக உக்கிரமான போராட்டம் நடந்த கால கட்டத்தில் பஸ் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று அரசு பஸ்கள் நாகர்கோவில் மண்டலத்திற்கான தடம் எண் 570, நெல்லை மண்டலத்திற்கான தடம் எண் 15 ஆகிய பேருந்துகளை பொங்கலை முன்னிட்டு இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கருணாகரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications