கயத்தாறு கிராமங்களை புறக்கணிக்கும் அரசு பஸ்கள்.. போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு!
கயத்தாறு சுற்றியுள்ள கிராமங்களுக்குள் செல்லாமல் தமிழக அரசு பேருந்துகள் பைபாஸ் ரோட்டிலேயே செல்வதைக் கண்டிப்பு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி: கயத்தாறு சுற்றியுள்ள கிராமங்களுக்குள் செல்லாமல் தமிழக அரசு பேருந்துகள் பைபாஸ் ரோட்டிலேயே செல்வதைக் கண்டிப்பு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க தாலுகாவாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு இருந்து வருகிறது. இந்தப்பகுதி 162 கிராமங்களைக் கொண்டது.

கயத்தாறு தாலுகா காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள தேசிய தங்க நாற்கர சாலையில் அமைந்துள்ளது. இந்த தாலுக்கா 1 லட்சத்திற்கும் மேலான மக்களைக் கொண்டது .
இப்பகுதியில் கயத்தாறை மையமாக வைத்து, அனைத்து நகர் புறங்களுக்கும், இப்பகுதி மக்கள் பல ஆயிரம் பேர் தினமும், வெளியூர் சென்று , பல்வேறு வேலை செய்து பிழைப்பு நடத்திவருகிறார்கள்.
மேலும் இப்பகுதியில் இருந்து பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் தினமும் பக்கத்துக்கு நகரங்களுக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில் அரசு பஸ்கள் அனைத்தும் பைபாஸ் ரைடர் என விளம்பர போர்டுகளை வைத்துக்கொண்டு ஊருக்குள் வராமல் வெளியில் செல்வதால், இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
இதனால், அரசு பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களிடம் பொதுமக்களுக்கு தினமும் பிரச்சினைகள் ஏற்படுகிறது. மேலும், அன்றாடம் உண்டாகும் இருதரப்பு பிரச்னையால் காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டு பலர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாகமதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பும் பெறப்பட்டுள்ளது. அதன் படி தினமும் 79 பஸ்கள் கயத்தாறு நகருக்குள் வந்து செல்ல உத்தரவிடப்பட்டு, பேருந்துகளின் தடம் எண் மற்றும் பேருந்துகளின் நம்பரும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கோர்ட்டின் தீர்ப்பையும், மக்களின் நலனையும் கண்டு கொள்ளாமல் பழையபடியே அரசுப்பேருந்துகள் பைபாஸ் சாலையிலே செல்கின்றன.
இதனால், உரிய நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்து தினமும் பேருந்துகள், கயத்தாறு உட்பகுதிக்குள் வந்து செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications