தீபாவளி: பயணிகளிடம் அதிகம் வசூலித்த கட்டணத்தை ஆம்னி பேருந்துகள் திருப்பி தர உத்தரவு
பயணிகளிடம் உயர்த்தி வசூலிக்கப்பட்ட கட்டணத்தை ஆம்னி பஸ் நிர்வாகம் பயணிகள் பஸ்சில் ஏறும்போது அவர்களுக்குத் திருப்பித்தர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தீபாவளி பண்டிகைக்காக உயர்த்தி வசூலிக்கப்பட்ட கட்டணத்தை ஆம்னி பஸ் நிர்வாகம் பயணிகளுக்கு பஸ்சில் ஏறும்போது திருப்பித்தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் இயக்கப்படும் ஆம்னி பஸ் கட்டணம் குறித்து கடந்த 19 தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், 2015-16-ம் ஆண்டில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்த கட்டணத்தையே இந்த தீபாவளி பண்டிகைக்கும் 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை வசூலிக்கவேண்டும்.
அதுபோல தீபாவளி பண்டிகை காலம் தவிர மற்ற நாட்களிலும், அதாவது இம்மாதம் 26ம் தேதி வரை மற்றும் நவம்பர் 1ம் தேதிக்கு மேற்பட்ட சாதாரண நாட்களிலும், 2015-16-ம் ஆண்டில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்த கட்டணத்தையே வசூலிக்கவேண்டும். அதில் மேலும் உயர்வு இருக்கக்கூடாது. 27ம் தேதியில் இருந்து 31ம்தேதிக்கு உட்பட்ட பண்டிகை கால டிக்கெட்டுகளை பயணிகளிடம் ஆம்னி பஸ் நிர்வாகம் விற்றிருந்தால், பஸ்சில் அந்த பயணி ஏறும் நேரத்தில் கூடுதல் கட்டணத்தை திருப்பித்தர வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்த உத்தரவுகள் எந்த மீறுதலும் இல்லாமல் துல்லியமாக பின்பற்றப்படுகிறதா என்பதை, போக்குவரத்துத் துறை, மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறையினர் ஆகியோர் உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற கிளை கூறியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications