தொழிலதிபரை ‘என்கவுண்டர் செய்வேன்’ என மிரட்டி சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
கோவை: விபத்துத் தொடர்பான புகாரை சரிவர விசாரிக்க மறுத்ததுடன், அது சம்பந்தமாக தொழிலதிபர் ஒருவரை என்கவுண்டரில் கொன்று விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகர் மீது கோவை நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், உடுமலையை அடுத்த விளாமரத்துப்பட்டி, பெரியபாப்பனூத்து கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர், சொந்தமாக பொக்லைன் இயந்திரம் வைத்துள்ளார். இவரிடம், பொக்லைன் டிரைவராக பணிபுரிந்து வருபவர் கார்த்திக்.
கடந்த 3ஆம் தேதி பைக்கில் பொள்ளாச்சியை அடுத்த தேவனூர் புதூரில் இருந்து கஞ்சம்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்த கார்த்திக் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார்த்திக்கிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் பைக்கில் சென்ற கார்த்திக் மீது கோமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், கார்த்திக்கின் முதலாளியான சிவசங்கர், விபத்துக்குள்ளான மோட்டார் பைக்கை மோட்டார் வாகன ஆய்வுக்கு அனுப்புமாறு பலமுறை கோரிக்கை வைத்தும் கோமங்கலம் போலீஸார் திங்கள் கிழமை வரை மோட்டார் சைக்கிளை சோதனைக்கு அனுப்பாமல் அலட்சியப்படுத்தி வந்துள்ளனர்.
இதுபற்றி சிவசங்கர் காவல்நிலையத்துக்கு வந்து விளக்கம் கேட்டபோது, அங்கு பணிபுரிந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் என்பவர் சிவசங்கரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி உன்னை "என்-கவுண்டர்" செய்து உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
பிரபாகரனின் கொலை மிரட்டல் குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார் சிவசங்கர். ஆனால், அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்காததால், நேற்று பொள்ளாச்சி ஜே.எம்.2, நீதிமன்றத்தில் நீதிபதி ஹரிஹரன் முன்னிலையில் பிரபாகரனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தார் சிவசங்கர்.
அவரது புகாரை ஏற்றுக்கொண்ட நீதிபதி வரும் மார்ச் 7-ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications