ஜெ.வுக்கு எதிராக ஆர்.கே.நகரில் களமிறங்கும் இந்திய கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன்
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் மாநில செயற்குழு உறுப்பினரான சி.மகேந்திரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் வரும் 9ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றிவேல், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அந்தத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக டிராஃபிக் ராமசாமி ஏற்கனவே, மனுத் தாக்கல் செய்துள்ளார். இன்று மதியம் சுமார் 2 மணியளவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சி.மகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் வரும் 9ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல், தீண்டாமைக்கு எதிரான மக்கள் எங்களை ஆதரிப்பார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் நேர்மையாக நடப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா, "இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 2 கட்சிகளின் சார்பாக சி.மகேந்திரனை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் முன்னிறுத்தியுள்ளோம்'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications