திருச்சி அருகே பயங்கரம்.. கிணற்றில் பாய்ந்த கார்... அண்ணன், தம்பி பலி
திருச்சி: திருச்சி மாவட்டம் விராலி மலை அருகே கார் ஒன்று கிணற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அண்ணன், தம்பி பலியாகினர். அவர்களின் தந்தை படுகாயமடைந்தார்.
திருச்சியைச் சேர்ந்தவர் ராஜசேகரன். 51 வயதான இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் சந்தோஷ் (23), திருச்சி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்துள்ளார்.
இளைய மகன் கோபுவை அருப்புக்கோட்டை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ப்பது தொடர்பாக இரு மகன்களுடனும் ராஜசேகரன் காரில் கிளம்பினார்.
விராலிமலை அருகே வாடியன்களம் என்ற இடத்தில் கார் வந்தபோது திடீரென ராஜேசகரனின் கட்டுப்பாட்டிலிருந்து கார் நழுவியது. தாறுமாறாக ஓடிய கார் சாலையோரம் இருந்த காலி கிணற்றில் போய் விழுந்து நொறுங்கியது.
கார் ஒன்று கிணற்றில் பாய்ந்ததைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் போனது.
அனைவரும் சேர்ந்து மீட்பு முயற்சியில் குதித்தனர். இதில் படுகாயமடைந்த நிலையில் மூன்று பேரும் வெளியே கொண்டு வரப்பட்டனர். ஆனால் சற்று நேரத்திலேயே சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு கோபு உயிரிழந்தார். தற்போது ராஜசேகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.