நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - 2 பேர் பரிதாப பலி
கள்ளக்குறிச்சி: கள்ளக் குறிச்சியில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் ஒன்று மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
சேலம் அயோத்தியா பட்டினத்தை சேர்ந்தவர் பாபு. இவர் நாகர்கோவிலில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவர் தனது மனைவி அனுசுயா மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் காரில், சென்னையில் சூப்பர் மார்க்கெட்டில் மேனேஜராக பணிபுரிந்து வரும் தனது நண்பர் அரவிந்தனை சந்திக்க சென்னை சென்றார்.

பின்னர் நேற்று இரவு ஊர் திரும்பிக்கொண்டு இருந்தனர். இவர்களுடன் காரில் அரவிந்தனும், அயோத்தியா பட்டினத்துக்கு வந்தார். காரை அரவிந்தனே ஓட்டி வந்தார். காரின் முன் இருக்கையில் அனுசுயாவும், பின் இருக்கையில் பாபுவும், அவரது குழந்தைகளும் அமர்ந்து வந்தனர்.
இன்று அதிகாலை 3.30 மணி அளவில் கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் என்ற இடத்தில் வந்த போது அங்கு சாலை யோரம் நின்றிருந்த டேங்கர் லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில், காரை ஓட்டி வந்த அரவிந்தனும், அனுசுயாவும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து போனார்கள். பாபுவும், அவரது 2 குழந்தைகளும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் சிகிச்சைக்காக கள்ளக் குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேலு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications