கார் திடீரென பஞ்சர்.. தொண்டரின் காரில் விமான நிலையம் சென்ற ஸ்டாலின்
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் கார் திடீரென பஞ்சர் ஆனதால் தொண்டர் ஒருவரின் காரில் விமான நிலையம் சென்றார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்வதற்காக தனது வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு காரில் புறப்பட்டார் ஸ்டாலின். மீனம்பாக்கம் விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த அவரது கார், ஆலந்தூர் கத்திப்பாரா பாலம் அருகே திடீரென 'பஞ்சர்' ஆனது. இதனால் காரை தொடர்ந்து ஓட்ட முடியாது என டிரைவர் கூறினார். உடனே காரில் இருந்து மு.க.ஸ்டாலின் கீழே இறங்கினார். அவரை பாதுகாப்பு படையினர் சூழ்ந்து கொண்டனர்.
இதையடுத்து மு.க.ஸ்டாலின், அவருக்கு பின்னால் வந்த தி.மு.க. தொண்டர் ஒருவரின் காரில் ஏறி விமான நிலையத்துக்கு சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினை பேட்டி எடுக்க செய்தியாளர்கள் காத்திருந்தனர். ஆனால் விமானத்துக்கு நேரம் ஆனதால் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி எதுவும் தராமல் அவசரமாக சென்றுவிட்டார்.