ரயில்வேயில் மறைமுக ஊழல்… கொள்முதலில் ரூ.10,000 கோடி இழப்பீடு… அதிர்ச்சி ரிப்போர்ட்
சென்னை: ரயில்வே துறைக்கு பொருட்கள் வாங்குவதில் உயரதிகாரிகள் சிலர் செய்யும் தவறுகள் காரணமாகவே ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.10,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருவதாக மெட்ரோ திட்ட அதிகாரி ஸ்ரீதரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ரயில்வே திட்டத்தில் ரூ.10000 கோடிக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக திடுக்கிடும் புகார் எழுந்துள்ள நிலையில் ரயில்வே துறைக்கு தேவையான டீசல், கான்க்ரீட் ஸ்லீப்பர் உள்ளிட்ட பொருட்களை ரயில்வே கழக அதிகாரிகள் குழு, குறிப்பிட்ட ஒரு சிலரிடமிருந்தே கொள்முதல் செய்வதே இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
எனவே கொள்முதல் செய்யும் அதிகாரத்தை அந்ததந்த மண்டலங்களைச் சேர்ந்த பொது மேலாளர்களிடம் ஒப்படைத்தால் இந்த இழப்பீடுகளை ஈடுகட்ட முடியும் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்மூலம் மற்றொரு மெகா ஊழலை ஸ்ரீதரின் அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அறிக்கை கேட்ட அரசு
ரயில்வே துறையில் தொடர்ந்து இழப்பீடுகளும், நிதி பற்றாக்குறையும் ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து அறிக்கை தருமாறு, இந்தியாவிற்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்த ஸ்ரீதரனிடம் மத்திய அரசு கேட்டிருந்தது.

அதிர்ச்சி அறிக்கை
ரயில்வே துறை நிர்வாகம் குறித்து ஆய்வு நடத்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் ஸ்ரீதரன் தனது அறிக்கையை ஒப்படைத்தார்.

கொள்முதல் அதிகாரம்
நாட்டில் பாதுகாப்பு துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவிலான பொருட்களை கொள்முதல் செய்யும் துறை ரயில்வே. ரயில்வே துறை பொருட்களின் கொள்முதலுக்காக ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி செலவிடுகிறது. இவற்றில் பாதிக்கும் மேலான கொள்முதல் அதிகாரம் மத்தியில் உள்ள ரயில்வே போர்டிடம் உள்ளது.

ரயில்வே கழகம்
ரயில்வே துறையில் கொள்கைகள் வகுப்பது, திட்டங்கள் வகுப்பது, கொள்கைகளின் அடிப்படையில் ரயில்வே நிர்வாகத்தை வழிநடத்துவது, பணிகளை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டதே ரயில்வே கழகம். ஆனால், இந்த கழகம் இத்தகைய பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை.

கொள்முதலில் முறைகேடு
ரயில்வே துறைக்கு தேவையான டீசல், கான்க்ரீட் ஸ்லீப்பர் உள்ளிட்ட பொருட்களை ரயில்வே கழக அதிகாரிகள் குழு, குறிப்பிட்ட ஒரு சிலரிடமிருந்தே கொள்முதல் செய்கின்றனர்.. இந்தியா முழுவதற்கும் தேவையான ரயில்வே துறை பொருட்களை இந்த ஒரு சிலரிடம் இருந்தே கொள்முதல் செய்வதால்,அவர்கள் நிர்ணயித்த விலையே கொடுக்கப்படுகிறது.

அதிகரிக்கும் ஊழல்
இந்த கொள்முதல் முதலீட்டாளர்களுக்கு நிதி ஒதுக்கும் அதிகாரமும் ஒரு சில அதிகாரிகளிடம் மட்டுமே இருப்பதால் ஊழலும், இழப்பும் அதிகரித்து வருகிறது.

மண்டலங்களிடம் ஒப்படைப்பு
கொள்முதல் அதிகாரங்களை ரயில்வே போர்டிடம் மட்டுமே இருப்பதற்கு பதிலாக அந்ததந்த மண்டலங்களைச் சேர்ந்த பொது மேலாளர்களிடம் ஒப்படைத்தால் கொள்முதல் செய்யப்படும் பொருட்களின் தரம் உயர்வதுடன், அதற்கான செலவுகள் குறைய வாய்ப்புள்ளது என்றும் தனது அறிக்கையில் ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.

அதிர்ச்சி அலைகள்
ரயில்வே திட்டத்தில் பொருட்களை கொள்முதல் செய்வதன் மூலம் ரூ.10000 கோடிக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications