மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி.... அன்புமணிக்கு எதிரான வழக்கு செப். 7-க்கு ஒத்திவைப்பு
டெல்லி: மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி அளித்தது தொடர்பான முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி மீதான வழக்கின் விசாரணை செப்டம்பர் 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்த போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இருந்தார்.

அவரது பதவிக் காலத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ரோஹில்கண்ட் மருத்துவக் கல்லூரி, மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள இண்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி ஆகியவை மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தன.
இதையடுத்து அமைச்சருக்குரிய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க அனுமதி வழங்கியதாக அன்புமணி மீது சி.பி.ஐ. 2 வழக்குகளைத் தொடுத்தது. இந்த வழக்குகள் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்த வழக்குகளின் விசாரணை சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி அஜய்குமார் ஜெயின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அன்புமணி, முன்னாள் சுகாதாரச் செயலர் கே.வி.எஸ்.ராவ் ஆகியோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் குப்தா ஆஜராகி, உச்சநீதிமன்றம் உத்தரவின்படியே அந்தக் கல்லூரிகளில் மத்திய அரசின் குழு ஆய்வு நடத்தியது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்களை, அன்புமணியோ அல்லது கே.வி.எஸ்.ராவோ நேரில் சந்தித்ததுகூட கிடையாது. மத்திய அரசின் குழுவுக்கும், தனிப்பட்ட முறையில் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. சுகாதாரத் துறை அமைச்சராக இருந்ததால்தான் அவர் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
இந்த வழக்கில் அன்புமணி, கே.வி.எஸ்.ராவ் ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை என்று வாதிட்டார். அனைவரது வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி அஜய்குமார் ஜெயின், இவ்வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அப்போது அன்புமணி தரப்பு வாதங்களை நிறைவு செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications