வங்கி ஏஜென்டுகள் தாக்குதலால் பலியான விவசாயி மீதே வழக்குப்பதிவு.. சர்ச்சைக்கு கலெக்டர் பதில்
திருவண்ணாமலை அருகே, வங்கி ஏஜென்ட்டுகளின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த விவசாயி ஞானசேகரன் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை: கடனை வசூலிக்க சென்ற வங்கி ஏஜென்ட்டுகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவசாயி ஞானசேகரன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தானிப்பாடியை அடுத்த போந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஞானசேகரன் (55). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தனூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாய கடன் திட்டத்தில் ரூ.5 லட்சம் கடன் பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார்.
அவற்றுள் ரூ.3 லட்சம் கடன் தொகையை ஞானசேகரன் செலுத்திவிட்டாராம். மீதமுள்ள ரூ.2 லட்சம் கடனை வறட்சியால் ஏற்பட்ட நஷ்டத்தால் அவர் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
தனியார் ஏஜென்ட்டுகள்
இதனால் அவரிடம் இருந்து கடனை வசூலிக்க வங்கி சார்பில் தனியார் ஏஜென்ட்டுகள் ராஜா, வெங்கடாஜலபதி ஆகியோர் அனுப்பப்பட்டனர். அவர்கள் கடந்த 4-ஆம் தேதி ஞானசேகரனின் வீட்டுக்கு சென்று கேட்டுள்ளனர். அதற்கு ஞானசேகரன் தனது நிலையை எடுத்துக் கூறியுள்ளார்.
தாக்குதல்
எனினும் அதை பரிசீலிக்காத ஏஜென்ட்டுகள் டிராக்டரை ஜப்தி செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். மேலும் வீட்டு வாசலில் நின்று ஞானசேகரனை அவமானப்படுத்தும் விதமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சாலையில் சென்று கொண்டிருந்த ஞானசேகரன் மற்றும் அவரது மகன் ராமதாஸிடம் வங்கி ஏஜென்ட்டுகள் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் தாக்கியதில் ஞானசேகரன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அன்று இரவே உயிரிழந்தார்.
குடும்பத்தினர் உடலை வாங்க சம்மதம்
விவசாயியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிவாரணம் கோரியும் அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர். இதையடுத்து குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் அவரது உடலை பெற்று கொள்ள குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். வங்கி ஏஜென்ட்டுகளும் கைது செய்யப்பட்டனர்.
இறந்தவர் மீது வழக்கு
இந்நிலையில் இறந்த ஞானசேகரன் மீது தானிப்பாடி காவல் நிலையத்தில் 5ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கி ஏஜென்ட்டுகளின் இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்தியதாகவும், ஞானசேகரனும், அவரது மகன் ராமதாஸும் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் ஞானசேகரன் மீதும் அவரது மகன் மீதும் தானிப்பாடி போலீஸார் கடந்த 5-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளனர். 4ம் தேதி இறந்தவர் மீது 5ம் தேதி எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஞானசேகரன் இறந்துவிட்டார் என்பதால் கோர்ட்டுக்கு செல்லும்போது தானாகவே அவர் பெயர் நீக்கப்பட்டுவிடும் என்று மாவட்ட கலெக்டர் விளக்கம் தெரிவித்தார். 4ம்தேதியே வங்கி அதிகாரிகள் மனு கொடுத்ததாகவும், எப்.ஐ.ஆர் 5ம் தேதி போடப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.