காக்கா முட்டை மீது வக்கீல்கள் வழக்கு: தனுஷ் ஆஜராக கோர்ட் உத்தரவு
காக்கா முட்டை படத்தில் வழக்கறிஞர்கள் இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான தனுஷ்-வெற்றிமாறன், இயக்குநர் மணிகண்டன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஆகஸ்ட் 6ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காக்கா முட்டை திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. தனுஷ் - வெற்றி மாறன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை மணிகண்டன் இயக்கியுள்ளார். தேசிய விருது பெற்றுள்ள இந்த படம் அனைத்து தரப்பு மக்களிடமும் பாராட்டுகளை பெற்றதோடு நல்ல விமர்சனங்களையும் பெற்றது.

காக்கா முட்டை படத்தில், வழக்கறிஞர் தொழிலை இழிவுப்படுத்தும் விதமாக வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் மணிவண்ணன், சென்னை எழும்பூர் பெருநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி முருகன், காக்கா முட்டை திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான தனுஷ்-வெற்றிமாறன், இயக்குநர் மணிகண்டன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஆகஸ்ட் 6ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications