அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரும் மு.க. ஸ்டாலின் வழக்கு- ஆக. 30-க்கு ஒத்திவைப்பு
மதுரை: முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மு.க. ஸ்டாலின் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் நீதிபதி 30 தேதிக்கு வழக்கைத் தள்ளி வைத்துள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு திமுக சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின், தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசியதாக புகார் எழுந்ததையடுத்து, திண்டுக்கல் மாவட்ட அரசு வழக்கறிஞர், ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஐகோட்டின் மதுரை கிளையில் மு.க. ஸ்டாலின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது, மு.க. ஸ்டாலின் சார்பில் வழக்கறிஞர்கள் ரவி, மாணிக்கம் ஆகியோர் ஆஜரானார்கள்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலசுப்ரமணியன், இந்த வழக்கில் தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞர் ஆஜராகி வாதாட இருப்பதால் விசாரணையை தள்ளி வைக்குமாறு நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி விமலா வரும் 30ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.