மாற்று சாதி பெண்ணுடன் திருமணம்.. மணமகனின் பாட்டி மூலம் பழிவாங்கிய சாதியவாதிகள்! திருப்பத்தூரில் ஷாக்
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே வேறு சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதை காரணம் காட்டி, மணமகனின் பாட்டியின் சடலத்தை ஊருக்குள் மயானத்தில் புதைக்கவிடாமல் சாதிய வெறியர்கள் தடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கணவாய்புதூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், காவல்துறை இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.

கணவாய்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கிறார். இவருக்கும் வேறு சமூகத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்திருக்கிறது. இந்த திருமணத்தை சசிகுமார் குடும்பம் ஏற்றுக்கொண்டாலும், ஊர்க்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக ஊர் தலைவராக இருப்பவரும், அவருக்கு நெருக்கமானவர்களும் இதனை ஏற்கவில்லை.
இது குறித்து பஞ்சாயத்து பேச சசிகுமார் வீட்டிற்கு இவர்கள் சென்றபோது, பஞ்சாயத்தெல்லாம் ஒன்னும் தேவையில்லை என்று சொல்லி வெளியே விரட்டியதாக தெரிய வருகிறது. இதனை இவர்கள் மனதில்வைத்து வந்திருக்கிறார்கள். இப்படி இருக்கையில்தான் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் சசிகுமாரின் தாய்வழி பாட்டி உயிரிழந்திருக்கிறார். அவரது உடலை ஊர் பொது சுடுகாட்டில் அடக்கம் செய்ய கொண்டு சென்றிருக்கிறார்கள்.
ஆனால், சாதி மாறி திருமணம் செய்ததை காரணம் காட்டியும், பஞ்சாயத்து பேச வந்த தங்களை வெளியே அனுப்பியதை காரணம் காட்டியும், மூதாட்டியின் சடலத்தை பொது சுடுகாட்டில் அடக்கம் செய்ய விடாமல் ஊர் தலைவர் உள்ளிட்டோர் வன்கொடுமை செய்திருக்கிறார் என சொல்லப்படுகிறது.
சடலத்தை அடக்கம் செய்ய சசிகுமாரின் உறவினர்கள் அனுமதி கேட்பதும், அதற்கு சாதி மாறி திருமணம் செய்ததை காரணமாக சொல்லி ஊர் தலைவர் அனுமதி மறுத்ததும் வீடியோவாக சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.
அதில், "சசிகுமார் ஊரைவிட்டு வெளியேறினால்தான் சடலத்தை புதைக்க விடுவோம்" என்றும், "நீ ஊருக்கு கட்டுப்படல. அதனால புதைக்க அனுமதிக்க முடியாது" என்றும் ஊராட்சிமன்ற தலைவர் உள்ளிட்டோர் பேசுவது தெளிவாக கேட்க முடிகிறது. இதனையடுத்து வேறு வழியில்லாமல் 10 கி.மீ தள்ளி மற்றொரு ஊரில் மூதாட்டியின் சடலம் புதைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் பிரச்சனை இத்துடன் நிற்கவில்லை. சசிகுமாரை வெளியேற்ற வேண்டும் என்று சாதி வெறியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து தனக்கும், தனது குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது என்று கூறி, தங்களது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்ற போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாதியை ஒழிக்க வேண்டும் என்று அரசு தீவிரமாக முயன்று வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமை வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications