காவிரி: செப். 16-ல் ரயில் மறியல்- திருமாவளவன்; செப். 24-ல் ஆர்ப்பாட்டம்- நெடுமாறன் #cauvery
சென்னை: கர்நாடகா தமிழரைப் பாதுகாக்க பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளன. இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் 16-ந் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். அதேபோல் செப்டம்பர் 24-ந் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் தமிழர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட பேருந்துகளும் லாரிகளும் தீக்கிரையாக்கப்பட்டன.
இது தமிழகத்தில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நாளை மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரிபவனை முற்றுகையிடப் போவதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது. அதேபோல் செப்டம்பர் 16-ந் தேதி தேமுதிக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதனிடையே செப்டம்பர் 16-ந் தேதியன்று தமிழகம் தழுவிய ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும் செப்டம்பர் 24-ந் தேதியன்று தமிழர் தேசிய முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதன் தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்திருக்கிறார்.