காவிரி நீர் குறைப்பால் தமிழகத்தில் 1 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கும்... விவசாயிகள் கவலை!
தமிழகத்திற்கு வழங்கப்படும் காவிரி நீர் குறைக்கப்பட்டுள்ளதால் சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் பாதிக்கப்படும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் : காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கும் நீரின் அளவு 14 டிஎம்சி அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளதால் 1 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கும என்று காவிரி டெல்டா விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான இறுதித்தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு அளித்து வந்த 192 டிஎம்சி நீரின் அளவு 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காவிரி டெல்டா விவசாயிகள், ஏற்கனவே காவிரி நீர் பங்கீட்டில் 1991ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 205 டிஎம்சி நீர் தர அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் 2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பில் இந்த நீரானது 192 டிஎம்சியாக குறைத்தது.
இந்நிலையில் இன்றைய தீர்ப்பில் இதுவும் குறைக்கப்பட்டு 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் நீரை அதிகரித்துத் தர வேண்டும் என்று நீதிமன்றத்தை தமிழகம் நாடும் நிலையில், படிப்படியாக நீரின் அளவு குறைக்கப்பட்டு தான் வருகிறது. அப்படியானால் ஏற்கனவே அளித்த தீர்ப்புகள் தவறா என்ற கேள்வி எழுகிறது.
காவிரி நீர் குறைக்கப்பட்டுக் கொண்டே வருவதால் 24 லட்சம் ஏக்கரில் தமிழகத்தில் நடந்து வந்த விவசாய சாகுபடியானது 16 லட்சமாக குறைந்தது. இது மேலும் 14 டிஎம்சி தற்போது குறைக்கப்பட்டுள்ளதால் மேலும் 1 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் சுருங்கி விடும், தமிழகத்தின் உற்பத்தி பாதிக்கும்.
ஒவ்வொரு முறை காவிரி தீர்ப்பு வரும் போது தமிழகர்களுக்கு கர்நாடகா பாதுகாப்பு தரவில்லை. என்ன அடிப்படையில் காவிரி நீர் தமிழகத்திற்கான பங்கில் குறைக்கப்பட்டுள்ளது என்பது தீர்ப்பு முழுவதையும் பார்த்தாலே தெரியும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சொல்வதை வரவேற்கிறோம். ஆனால் இது தொடர்பாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, கர்நாடக அரசும் அதற்கு அனுமதிப்பதில்லை. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள நீரையாவது கர்நாடகா அளிக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.