காவிரியை காக்க மூன்று கட்ட முற்றுகை போராட்டம்: வைகோ
தஞ்சாவூர்: காவிரியில் இரு அணைகள் கட்டப்படவுள்ளதைத் தடுத்து நிறுத்தக் கோரியும், மீத்தேன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், 3 கட்ட முற்றுகைப் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
தஞ்சாவூரில் காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 215 அமைப்புகள் கலந்து கொண்டன.
இதில், காவிரியில் இரு அணைகளைக் கட்ட முனைந்துவிட்ட கர்நாடக அரசின் வஞ்சகத் திட்டத்தை தடுத்து நிறுத்துவது குறித்தும், தஞ்சாவூர், சிவகங்கை மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு திட்டத்தைத் தொடங்க விடாமல் தடுத்து நிறுத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
காவிரியில் இரு இடங்களில் அணைகள் கட்ட கர்நாடக அரசு முனைந்துவிட்டதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. அந்தக் கடமையை மத்திய அரசு செய்ய வேண்டும். மீத்தேன் எரிவாயு திட்டத்தைச் செயல்படுத்தும் முடிவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
இவற்றை வலியுறுத்தி, காவிரி பிரச்னைக்காக 1924 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் போடப்பட்ட பிப். 18ஆம் தேதியைக் கருத்தில் கொண்டு, வரும் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னை மாநகரம் தவிர்த்து காவிரி நதி நீரால் பயன்பெறும் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் ஆகிய 14 மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் இயங்குவதைத் தடுத்து, அறவழியில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
பின்னர், சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை மார்ச் 11-ஆம் தேதி இயங்கவிடாமல் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பகத்சிங் நினைவு நாளான மார்ச் 23-ஆம் தேதி சென்னை உள்பட 14 மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை இயங்கவிடாமல் முற்றுகையிடவும் தீர்மானிக்கப்பட்டது என்று வைகோ கூறினார்.












Click it and Unblock the Notifications