சென்னையில் கர்நாடக வங்கிகள், ஹோட்டல்கள், நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு
Recommended Video
சென்னை: காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை தொடர்பான வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதால் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
சென்னையிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் கர்நாடகாவைச் சேர்ந்த சிண்டிகேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் கிளைகள் உள்ளன. உடுப்பி ஹோட்டல்கள் பெருமளவில் உள்ளன. பல்வேறு கர்நாடக நிறுவனங்களும் இங்கு இயங்கி வருகின்றன.
இவற்றுக்கு இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. ஆனால் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை கடந்த காலங்களில் மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து இங்கும் சில அமைப்புகள் பதிலடியில் இறங்கியுள்ளன.
இதை கருத்தில் கொண்டு இன்று காவிரி தீர்ப்பு வெளியாகவுள்ளதால் சென்னையில் உள்ள கர்நாடகாவை சேர்ந்த ஹோட்டல்கள், நிறுவனங்கள், வங்கிக் கிளைகள், கர்நாடக சங்கம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோயம்பேட்டிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்குள்ள கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழக அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.