சிசிடிவி காட்சியில் ‘ஓடும்’ கேரள நபருக்கும் குண்டுவெடிப்பிற்கும் தொடர்பில்லை: சிபிசிஐடி தகவல்
சென்னை: சென்னை குண்டுவெடிப்பில் சிசிடிவியில் பதிவான நபருக்கு தொடர்பில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி அறிவித்துள்ளது.
கடந்த வாரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் இளம்பெண் ஒருவர் பலியானார், 14 பேர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதல் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, சென்னை மற்றும் பெங்களூர் ரயில் நிலைய சிசிடிவி கேமராக் காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் மர்ம நபர் ஒருவர் மீது சந்தேகம் கொண்டனர். ரயிலில் குண்டு வெடிப்பதற்கு சில நிமிடங்கள் முன்னதாக அவர் ரயிலில் இருந்து இறங்கி ஓடுவது போன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்தது சந்தேகத்தை வலுப்படுத்தியது.
இந்நிலையில், சிசிடிவியில் பதிவான அந்த நபருக்கும் குண்டுவெடிப்பிற்கும் சம்பந்தமில்லை என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சிபிசிஐடி செய்தித் தொடர்பாளர் டிஎஸ்பி வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘சிசிடிவி கேமராவில் பதிவானவர் அடையாளம் காணப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அவர் கேரளாவை சேர்ந்தவர். சென்னையில் இருந்து விமானத்தில் இலங்கை செல்ல திட்டமிட்டிருந்த அவர் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததால், விமானத்தை பிடிப்பதற்காக அவசரம் அவசரமாக ஓடியதும் தெரிய வந்துள்ளது.
கேரளாவை சேர்ந்த அவரது பெயர் உள்ளிட்ட மற்ற விவரங்களை வெளியிட விரும்பவில்லை. குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் அவருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றார்.
சிசிடிவி காட்சிகளில் உள்ள அந்நபர் கேரளாவை சேர்ந்தவர் என்றும், சென்னையில் இருந்து விமான மார்க்கமாக இலங்கைக்கு கோடை சுற்றுலா சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாம்.
கவுகாத்தி ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததால் விமானத்தைப் பிடிப்பதற்காக அவர் ஓடியதாக விசாரணையில் விளக்கமளித்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications