எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் மரண வழக்கு: சிபிசிஐடிக்கு விசாரணைக்கு மாற்றம்
சென்னை: விழுப்புரம் எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவ கல்லூரி மாணவிகள் மூவரின் மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றி டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த பங்காரம் கிராமத்தில் உள்ள எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு இரண்டாம் ஆண்டு படித்து வந்த ணவிகள் சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகியோர் கடந்த 23ம் தேதி கல்லூரியின் எதிரில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

இந்த 3 மாணவிகளும் கல்லூரி நிர்வாகத்தின் கட்டண கொள்ளையால் தற்கொலை செய்து கொள்ளப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதாலேயே 3 பேரும் அடித்து கொலை செய்யப்பட்டதாக பெற்றோர்கள் புகார் கூறினர். மாணவி மோனிஷாவின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் தகனம் செய்யப்பட்டது.
சின்னசேலம் போலீசார் சந்தேக மரண வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கல்லூரி தாளாளர் மகன் சுவாகர்வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கல்லூரி தாளாளர் வாசுகி மணியன் 25ம் தேதி சென்னை தாம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன்றத்தில் நேற்று மாஜிஸ்திரேட்டு தமிழ்ச்செல்வி முன்பு வாசுகியை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது நீதிபதியிடம் வாசுகி அளித்த வாக்குமூலத்தில், இந்த வழக்கில் போலீசார் என்னை வேண்டும் என்றே சிக்க வைக்க முயற்சிக்கின்றனர். இறந்த மாணவிகள் நன்றாக படிக்கக்கூடியவர்கள். அவர்கள் இதுவரை கல்லூரிக்கு எதிராக எவ்வித போராட்டத்திலும் ஈடுபட்டது கிடையாது.
கல்லூரியை மூட வேண்டும் என கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக சிலர் செயல்பட்டு வந்தனர். எங்கள் கல்லூரியை மூடி காட்டுகிறேன் என போலீஸ்காரர் ஒருவர் சபதமிட்டார். 3 மாணவிகள் கைகளை ஒன்றாக கட்டிக் கொண்டு, எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும்? திட்டமிட்டு, 3 மாணவிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை, தற்கொலை என்ற கோணத்தில் எனக்கு எதிராக போலீசார் திசை திருப்பி உள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.
கல்லூரி தாளாளர் சுப்பிரமணியன், உடல்நலக்குறைவு காரண மாக சென்னையில் ஒரு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. சுப்பிரமணியனின் உறவினராக வெங்கடேசன் என்பவர் மீது கல்லூரி மாணவ, மாணவிகள் புகார் தெரிவித்திருந்தனர். இதை யடுத்து இந்த வழக்கில் வெங்கடே சனை 5-வது குற்றவாளியாக போலீஸார் சேர்ததனர். இதை யறிந்த வெங்கடேசன் தலைமறை வானார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். வெங்க டேசன் எப்போதும் கல்லூரி வளாகத்திலேயே இருப்பாராம்.
கல்லூரியில் நடக்கும் முறைகேடுகள் குறித்து யாராவது குரல் எழுப்பினால் அவர்களை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெருநகர 9-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஏ.பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ் முன்பு வெங்கடேசன் சரணடைந்தார். அவரை பிப்ரவரி 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மாணவிகள் மரணம் குறித்து பல சந்தேகங்கள் உள்ளதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசியல் கட்சித்தலைவர்களும், மாணவிகளின் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் மோனிஷாவின் தந்தை, தனது மகள் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். இதனிடையே எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவ கல்லூரி மாணவிகள் மூவரின் மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றி டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications