கோவையில் ஹெலிகாப்டர் சுற்றுலா அறிமுகம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்
கோவையில் ஹெலிகாப்டர் சுற்றுலா அறிமுகம் செய்யப்பட்டது.
Recommended Video

கோவை: கோவையில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று தொடங்கி வைத்தார்.
கோவை துடியலூர் வட்டமலைபாலையத்தில் உள்ள கங்கா நர்சிங் கல்லூரி மற்றும் நேரு கல்வி நிறுவனங்கள் இணைந்து சுற்றுலா செல்வதற்கு ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்தும் நோக்கில் ஹெலி கார்னிவெல் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி மே மாதம் 10 – ம் தேதி முதல் 15 – ம் தேதி வரை காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கோவை என்.ஜி.ஜி.ஓ காலனியில் உள்ள கங்கா நர்சிங் கல்லூரி வளாகத்தில் இந்த நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது.

அதற்கான துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு ஹெலிகாப்டர் சேவையை தொடங்கி வைத்து பயணம் செய்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், இந்த ஹெலிகாப்டர் சேவையினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் இங்கிருந்து அருகில் உள்ள ஊட்டிக்கு ஹெலிகாப்டரில் சென்றுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். கூடிய விரைவில் முதல்வருடன் பேசி தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களுக்கு ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் வேலுமணி உறுதிபட கூறினார்
இந்த ஹெலிகாப்டர் சேவையின் மூலம் ஒவ்வொரு பயணமும் 10 நிமிடம் நடைபெறும் என்றும் இதில் கோவையை “ஏரியல் வியூவில்” கண்டு ரசிப்பதுடன், ஹெலிகாப்டரில் பறக்கும் போதும் பயணிகளின் வீட்டின் மேல் பறந்து செல்ல வாய்ப்பு ஏற்படுத்தித்தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நிமிடத்தில் கோவையின் 20 கி.மீ. சுற்றளவில் உள்ள மருதமலை, ஈஷா, வெள்ளிங்கிரி மலை, பேரூர், செட்டிபாளையம் கோல்ப் மைதானம், லோட்டஸ் டெம்பிள், கோவை மாநகரத்தின் அழகையும் கண்டு களிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கு மிகக் குறைந்த கட்டணமாக ஒரு நபருக்கு ரூபாய் 3,999.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலி கார்னிவல் நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கட்டண சலுகையும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications