கனிஷ்க் நிறுவன நகைகளும் போலியானவையா?... ஷாக்கான சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை!
வங்கிகளை மோசடி செய்த கனிஷ்க் நிறுவனம் நகைக்கடைகளுக்கு வடிவமைத்து தந்த ஆபரணங்களின் தரம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னை : 14 வங்கிகளை மோசடி செய்து ரூ. 824 கோடி கடன் பெற்ற கனிஷ்க் நிறுவனத்திடம் இருந்து நகைக்கடைகளுக்கு தயாரித்து கொடுக்கப்பட்ட ஆபரணங்களின் தரம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இவை 916 கேடிஎம் நகைகளா அல்லது கலப்படம் செய்யப்பட்டவையா என்றும் சிபிஐ பூபேஷ்குமார் ஜெயினிடம் விசாரணை நடத்தி வருகிறது.
சென்னையில் கடந்த2010ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது கனிஷ்க் கோல்ட் பிரைவேட் லிமிடெட். தங்க நகைகளை தயாரித்து நகைக்கடைகளுக்கு விநியோகம் செய்வதே இதன் பிரதான தொழில், தனியாக கனிஷ்க் நிறுவனமும் ஷோரூம் வைத்துள்ளது.
இந்த நிறுவனத்தை வடஇந்தியாவைச் சேர்ந்த பூபேஷ்குமார் ஜெயின் மற்றும் அவரது மனைவி நீதா ஜெயின் நிர்வகித்து வந்துள்ளனர். தொழில் விருத்திக்காக இவர்கள் எஸ்பிஐ வங்கி மற்றும் அதன் கூட்டமைப்பு வங்கிகளான 13 வங்கிகளிடம் போலி ஆவணங்கள், போலி தங்கம் இருப்பை காண்பித்து சுமார் ரூ. 824 கோடி அளவிற்கு கடன் வாங்கியுள்ளன.

முதலீட்டாளர்களை ஏமாற்றிய பூபேஷ்
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பூபேஷ் வங்கிகளுக்கான கடனை திருப்பி அளிக்காததோடு, வட்டியும் செலுத்தவில்லை. இதே போன்று முதலீட்டாளர்களிடம் இருந்து பூபேஷ் ஏமாற்றுவதாக புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து அவரை மோசடியாளர் என்று வங்கிகள் அறிவித்தன.

விசாரணை
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பூபேஷ் குமார் ஜெயின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிபிஐக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கடிதம் எழுதியது. இதன் அடிப்படையில் பூபேஷ் குமார் ஜெயின் மற்றும் நீதா ஜெயின் மீது வழக்கு பதியப்பட்டு அவர்களிடத்தில் பெங்களூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தங்கம் தரமானவையா?
இதனிடையே சுமார் 10 ஆண்டுகளாக தங்க நகைகள் தயாரித்து விநியோகம் செய்து வரும் கனிஷ்க் நிறுவனத்திடம் இருந்து விற்கப்பட்ட தங்க நகைகளின் தரம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. கனிஷ்க் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் வங்கிகளிடம் தங்கம் இருப்பை அதிகரித்து காட்டியுள்ளது.

சந்தேகம்
அப்படியானால் இந்த நிறுவனத்திடம் எவ்வளவு தங்கம் இருப்பு இருந்தது, இவற்றில் எவ்வளவு தங்கம் நகைகளாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்தும் சிபிஐ அதிகாரிகள் பூபேஷ்குமார் ஜெயினிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications