தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த மத்திய குழு டெல்லி புறப்பட்டது !
சென்னை: மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த குழுவினர் ஆய்வை முடித்துக்கொண்டு இன்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றனர்.
அண்மையில் கொட்டித் தீர்த்த வடகிழக்குப் பருவமழையால் தமிழகத்தின் சென்னை, கடலூர், ள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் சில பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச்செயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினை மத்திய அரசு அமைத்தது.

இந்த குழு தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டது. பின்னர், புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதித்த இடங்களை பார்வையிட்டனர்.
அப்போது மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் பாதிப்பு குறித்து மத்திய குழுவிடம் விவசாயிகள் விளக்கினர்.அதனை தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் பிரசாத் தலைமையிலான மத்திய குழுவினர் சந்தித்து பேசினர். புதுச்சேரியில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்த ஆய்வை இன்று நிறைவு செய்த பின்னர் மத்திய குழு சென்னை திரும்பியது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த குழு தலைவர் பிரசாத் கூறுகையில், வெள்ள சேதம் குறித்து ஒருவாரத்தில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த குழுவின் ஆய்வறிக்கைக்குப் பின்னர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications