தமிழகத்தை முற்றிலும் பாலைவனமாக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது : திருமாவளவன்
தமிழகத்தை முற்றிலும் பாலைவனமாக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் : தமிழகத்தை அனைத்து வகைகளிலும் பாலைவனமாக்கும் செயல்களில் மத்தியஅரசு ஈடுபட்டு வருகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஓ.என்.ஜி.சி நிறுவனப் பணிகளைக் கண்டித்து தஞ்சாவூரில் நடந்த முற்றுகைப்போராட்டத்தில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதிக்கும் திட்டங்களாக ஷெல் எரிவாயு, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் கிணறுகள் என அடுத்தடுத்து திட்டங்களை மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்த அனுமதி அளித்து வருகிறது.
இந்த திட்டங்கள் அனைத்தும் முதலில் கேரளாவில் செயல்படுத்துவதாக இருந்தது. ஆனால், கேரள மக்களின் தொடர் போராட்டம் காரணமாக அனைத்து திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்தி வருகின்றனர்.
இதேபோல், நியூட்ரினோ திட்டமும் வட மாநிலங்களில் செயல்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அம்மாநில அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் போராட்டத்தினால் அந்தத் திட்டமும் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.
இப்படி தொடர்ந்து தமிழக அரசும், மத்திய அரசும் தமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. ஒருபோதும் இந்த திட்டங்களைச் செயல்படுத்த விடமாட்டோம் என்றும் மக்களைத் திரட்டி போராடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications