காவிரி வழக்கில் தீர்ப்பு....கர்நாடகா தேர்தலுக்காக தமிழகத்தை மீண்டும் வஞ்சிக்குமோ மத்திய பாஜக அரசு?
காவிரி வழக்கில் என்னதான் தீர்ப்பு வந்தாலும் கர்நாடகா தேர்தலை மனதில் வைத்து மத்திய பாஜக அரசு வஞ்சித்துவிடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கப் போகும் இறுதித் தீர்ப்பை மத்திய பாஜக அரசு நடைமுறைப்படுத்துமா? அல்லது கர்நாடகா சட்டசபை தேர்தலை மனதில் வைத்து மீண்டும் வஞ்சிக்குமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது.
மத்திய பாஜக அரசு அமைந்த பின்னர் காவிரி விவகாரத்தில் தமிழர் விரோதப் போக்கை அப்பட்டமாகவே கடைபிடித்து வருகிறது. தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய பாஜக அரசு எதிர்ப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது. ஆனால் எதையும் கர்நாடகா அரசு செயல்படுத்தவில்லை. இதை மத்திய அரசும் தட்டிக்கேட்கவில்லை. மாறாக உச்சநீதிமன்றத்துக்கு போய் மேலாண்மை வாரியம் தேவை இல்லை என்றது. நிர்மலா சீதாராமன் போன்ற மத்திய அமைச்சர்களே மேலாண்மை வாரியம் அமைக்க பகிரங்க எதிர்ப்பும் தெரிவித்தனர்.
கர்நாடகாவில் தேர்தல்
இதன் உச்சமாக அத்தனை நதிநீர் பிரச்சனைகளுக்கும் ஒரே வாரியம் என அணுகுண்டை வீசியது மத்திய அரசு. இப்போது கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
கர்நாடகா மதிக்காது
இந்த நிலையில் உச்சநீதிமன்றம் காவிரி வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளது. உச்சநீதிமன்றம் வழங்கப் போகும் தீர்ப்பை கர்நாடகா மதிக்காது என்பது தெரிந்த கதை.
மீண்டும் வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசு
ஆனால் மத்திய அரசு இதில் என்ன செய்யப் போகிறது? உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை ஏற்று செயல்படுத்துமா? அல்லது கர்நாடகா சட்டசபை தேர்தலை மனதில் வைத்துக் கொண்டும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதாலும் மீண்டும் வஞ்சகத்தை அரங்கேற்றுமோ மத்திய பாஜக அரசு என்கிற அச்சம் எழுந்துள்ளது.