மாரத்தானில் வென்ற - சிறந்த மாணவ, மாணவியருக்கு விருது, பாராட்டு
தேவகோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு எல்ஐசி சார்பில் விருது வழங்கி பாராட்டப்பட்டது. அதேபோல மாரத்தான் போட்டியில் வென்ற மாணவ, மாணவியருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எல் .ஐ.சி.சார்பில் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்து லெட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை எல்.ஐ.சி.கிளை மேலாளர் மோகன சுந்தரம் மாணவர்களுக்கு விருதுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி எல்.ஐ.சி. வைர விழா கொண்டாடுவதை குறித்து சிறப்புரையாற்றினார்.
கிளையின் வளர்ச்சி அதிகாரி தமிழரசு முன்னிலை வகித்தார். இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தொடர்பாக ராஜி என்ற மாணவியும், எல்.ஐ .சி .யின் செய்லபாடுகள் மற்றும் பயன்பாடுகள் பற்றி மாணவிகள் தனலெட்சுமியும், பரமேஸ்வரியும், காப்பீட்டின் பயன்கள் தொடர்பாக உமா மஹேஸ்வரியும் பேசினார்கள்.
முத்தய்யன், ஆகாஷ், தேவதர்ஷினி, ஈஸ்வரன், அஜய் பிரகாஷ், சஞ்சீவ், ஜெனிபர், கார்த்திகா, பார்கவி லலிதா, பரத்குமார் ஆகிய 10 மாணவர்களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் எல்.ஐ .சி.யின் சார்பாக வழங்கப்பட்டன. ஏராளமான பெற்றோர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
மாரத்தான்
இதற்கிடையே, காரைக்குடியில் நாச்சியப்ப சுவாமிகளின் 5வது குருபூஜை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
அதிகாலை 4.40 மணிக்கெல்லாம் பெற்றோர் வர இயலாத சூழ்நிலையில் ஆசிரியர் கருப்பையா 10 மாணவ, மாணவியரை தேவகோட்டை பேருந்து நிலையத்தில் பேருந்து மூலம் அழைத்து கொண்டு காரைக்குடியில் பை பாஸ் ரோட்டில் ஆரம்பித்த மாரத்தான் போட்டியில் பங்கேற்க வைத்தார். மாணவர்களும் ஆர்வமுடன் பங்கேற்று கடைசி வரை குறிப்பிட்ட இடமான கோவிலூர் மடத்தை அடைந்தனர்.
இவர்களுக்கு பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தார்கள். முதல் தலைமுறையாக இவர்கள் மாரத்தான் பந்தயத்தில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றோர் அழைத்து செல்ல இயலாத சூழ்நிலையில் (பெற்றோர் கூலி வேலை பார்ப்பதால்) பள்ளியின் ஆசிரியர்களே காலை வேளையில் பேருந்து மூலம் அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.