ஜெ.வை சிரிக்க வைத்து சீட் வாங்கியவர் 36 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
விருதுநகர்: அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவை வேட்பாளர் தேர்வின் போது வயிறு குலுங்க சிரிக்க வைத்ததால் ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் போட்டியிட்ட வாய்ப்பு பெற்ற மு.சந்திரபிரபா மாவட்டத்திலேயே அதிக வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பண்டிதன்பட்டியைச் சேர்ந்தவர் த.முத்தையா. இவர் மாவட்ட கவுன்சிலராக உள்ளார். இவரது மனைவி சந்திரபிரபா. எம்.ஏ., பி.எட்., பட்டதாரியான இவர், அதிமுகவில் மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் ஆவார். மேலும் அயன் நாச்சியார்கோவில் ஊராட்சி மன்றத் தலைவியாக 10 ஆண்டுகளாக உள்ளார்.

மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர கூட்டுறவு வங்கியின் இயக்குநராகவும் உள்ளார்.மிகவும் எளிமையான இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் போட்டியிட அதிமுகவில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இவர் உள்ளிட்ட மூவருக்கு நேர்காணலுக்கு அழைப்பு வந்தது.
நேர்காணலுக்குச் சென்ற சந்திரபிரபா, நேர்காணல் நடந்த அறைக்குள் நுழைந்ததும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலில் நெடுஞ்சான் கிடையாக காலில் விழுந்து எழுந்ததோடு குனிந்து கொண்டே நின்றாராம்.
சீட்டுல உட்காருங்க என்று ஜெயலலிதா சொன்னதற்கு 'இல்லம்மா' என்று சொல்லி விட்டு...திடீரென "தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, தமிழகத்தை காக்க வந்த காவல் தெய்வம்"என்று பொதுக்கூட்ட மேடையில் பேசுவது போல் புகழத்தொடங்கி விட்டாராம்.
மனப்பாடம் செய்து ஓப்பிப்பது போல் சந்திர பிரபா கூறியதை கேட்ட ஜெயலலிதா விழுந்து விழுந்து சிரித்தாராம். அவரே ஒரு கட்டத்தில் போதும்மா, போதும் இது பொதுக்கூட்ட மேடையில்லை.. முதல்ல உட்காருங்க...என்று சொன்ன பிறகே நிறுத்தி விட்டு சீட்டில் அமர்ந்தாராம் சந்திர பிரபா
என்ன படிச்சிருக்கீங்க என்றாராம். தமிழில் ஆராய்ச்சி பட்டம் வாங்கியிருக்கேன்னு சொல்லவும் அப்படியா என்பதுபோல் பார்த்த ஜெயலலிதா மீண்டும் வாய் விட்டு சிரித்து விட்டு சரி போய் வா... ஆல் தி பெஸ்ட் என்று வாழ்த்து சொல்லி அனுப்பி வைத்தாராம். இதனையடுத்து அவருக்கு போட்யிட வாய்ப்புக் கிடைத்தது. மாவட்டத்திலேய கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் (36,673 வாக்குகள் கூடுதலாகப் பெற்று) வெற்றி பெற்றுள்ளார்.
சந்திரபிரபா வெற்றி பெற்றாலே அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பரவலாக கட்சியினரிடையே பேசப்பட்டு வந்த நிலையில் மிக் கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இவருக்கு கண்டிப்பாக ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications