போலீஸ் அனுமதி மறுப்பு.. வேலூருக்கு பதில் எழும்பூரிலிருந்து கோட்டைக்கு வாகனப் பேரணி: அற்புதம் அம்மாள்
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டு காலம் சிறையிலிருக்கும் பேரறிவாள் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்யக் கோரி நடைபெறவிருந்த வாகனப் பேரணி சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் 25 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். இவர்களின் விடுதலைக்காக நாளை வேலூரில் இருந்து சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை நோக்கி வாகனப் பேரணியை நடத்த இருந்தார் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள்.

இந்தப் பேரணிக்கு மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் எனப் பலரும் பேரணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். முதல்வர் ஜெயலலிதாவும் பேரணிக்கு அனுமதி கொடுத்திருந்தார். இந்நிலையில் 7 பேரின் விடுதலைக்காக வேலூரில் இருந்து சென்னை கோட்டை நோக்கி நடைபெறவிருந்த வாகனப் பேரணிக்கு வேலூர் மாவட்ட காவல்துறையினர் அனுமதி தர மறுத்துவிட்டனர்.
மேலும் தேசிய நெடுஞ்சாலையில் பேரணி நடைபெற உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவே பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், வேலூரில் இருந்து சென்னை வரை நடைபெறவிருந்த பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். எனவே வேலூர் சிறைக்குப் பதில் சென்னை எழும்பூரிலிருந்து பேரணி கிளம்பும் எனத் தெரிவித்தார்.
எழும்பூரிலிருந்து தலைமைச் செயலகம் வரை பேரணியாக சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு அளிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications