தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே வாகனச் சோதனை தீவிரம்
நெல்லை: தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதையடுத்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு, கேரளா, உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை அடுத்து பல்வேறு இடங்களில் வாகனச் சோதனை நடத்தினர். சோதனையின் போது வீடியோ பதிவும் செய்தனர்.

அதே நேரத்தில் விதிமுறை மீறல்களும் பல இடங்களில் நடந்துள்ளன. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் கதவை பூட்டிக்கொண்டு மாவட்ட சமூக அலுவலர் லலிதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நிலையில் சமூக நலத்துறை அதிகாரிகள் பயனாளிகளை வரவழைத்து அவசர அவசரமாக நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதே போல் நெல்லை மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் நகர்மன்றக் கூட்டம் அவசர அவசரமாக நடத்தப்பட்டது. அப்போது செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்காமல் நலத்திட்டங்களை பெற வந்தவர்களிடம் கையெழுத்து வாங்கி பொருள்களை வீடுகளுக்கே அனுப்பி விடுவதாக உறுதியளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications