எய்ட்ஸ் நோய் தாக்கியவர்களை ஒதுக்கவேண்டாமே! சென்னையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்
சென்னை: எய்ட்ஸ் ஒரு உயிர்கொல்லி நோய் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எய்ட்ஸ் நோய் தாக்கியவர்களை தீண்டத்தகாதவர்களாக எண்ணி ஒதுக்குவதுதான் அவர்களை மெல்லக்கொல்லும்.
எய்ட்ஸ்நோயினால் பாதிக்கப்பட்டவர்களை தொடுவதன் மூலமோ, அவர்களுடன் அருகில் அமர்வதன் மூலமாகவோ எய்ட்ஸ் பரவாது என்று காலம் காலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இன்றைக்கும் அவர்கள் சமூகத்தால் ஒதுக்கப்படுகின்றனர்.

எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே டிசம்பர் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுக்கிறது. இதனையொட்டி, சென்னையில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்காமல், சமூகத்துடன் இணைந்து வாழத் தேவையான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த பேரணியில் வலியுறுத்தப்பட்டது.
எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
மெரினா கடற்கரை சாலையிலுள்ள கலங்கரை விளக்கத்திலிருந்து உழைப்பாளர் சிலை வரை இந்த பேரணி நடைபெற்றது. இதில், சென்னையிலுள்ள பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 500க்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டனர். போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலேயே உலக அளவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் இருப்பதாக பேரணி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதே போல் மற்றொரு விழிப்புணர்வு பேரணியும் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்காமல், சமூகத்துடன் இணைந்து வாழத் தேவையான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த பேரணியில் வலியுறுத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்ட மாணவர்கள் எய்ட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் சென்றனர்.
உலக அளவில் எய்ட்ஸ்
உலக அளவில் இதுவரை எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளான 8 கோடி பேரில் 4 கோடி பேர் எய்ட்ஸ் நோயினால் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 2006ஆம் ஆண்டில் 23 லட்சமாக இருந்த எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2011ஆம் ஆண்டில் 20 லட்சமாக குறைந்தது.
2011ஆம் ஆண்டில் புதிதாக எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 16 ஆயிரம் என்று அச்சுறுத்துகிறது புள்ளிவிபரம்.
குளோஸ் தி கேப்
கடந்த 2013ஆம் ஆண்டில் உலக அளவில் இருந்த 3.50 கோடி எச்.ஐ.வி. பாதித்தவர்களில் 20 லட்சம் பேர் புதிதாக எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். எச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து வலியுறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதையே இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது.
எச்.ஐ.வி. பாதிப்பின் முற்றிய நிலைதான் எய்ட்ஸ். இந்தாண்டு உலக எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான வாசகம் `குளோஸ் தி கேப்' என்பதாகும்.
எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கும், பரிசோதனை செய்துகொள்ளாமல் இருப்பவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைக்கப்படவேண்டும் என்பதுதான் இதன் முக்கிய அம்சம்.

இலக்கு நிர்ணயம்
எச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வை எல்லோருக்கும் அளிப்பது, பரிசோதிப்பது, சிகிச்சை அளிப்பது ஆகியவற்றின் மூலம் இந்த இடைவெளியை குறைக்கலாம். 2030ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்ட ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (UNAIDS) திட்டமிட்டுள்ளது. இன்னும் 15 ஆண்டுகளில் இந்த இலக்கை நாம் அடைய வேண்டிய கட்டாயம் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.












Click it and Unblock the Notifications