ஜெ.,வுக்கு சுவாச உதவி, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தற்போது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம், 22ம் தேதி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவருக்கு நீர்சத்து இழப்பு, ஜுரம் என்றுதான் காரணம் கூறப்பட்டது. இப்படித்தான் தனது முதல் அறிக்கையை அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டது.
இரண்டாவது அறிக்கையில், அவர் நல்ல உணவு உட்கொள்கிறார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் என்று அறிக்கையளிக்கப்பட்டது.
அப்பல்லோ அளித்த மூன்றாவது மருத்துவ அறிக்கையில், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல் மருத்துவ சிகிச்சை அளிக்கிறார். ஜெயலலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள நோய் தொற்றுக்கு ரிச்சர்ட் சொன்ன அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
[Read This: எனக்குப் பின்னாலும் நூறு வருடம் இருக்கும் அதிமுக.. சமூக வலைதளங்களில் பரவி வரும் ஜெ. வீடியோ! ]
லண்டன் டாக்டர் வருகைக்கு பிறகுதான், அதிமுக தொண்டர்கள் மற்றும், பொதுமக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டன. காய்ச்சலுக்கும், நீர்ச் சத்து குறைபாடுக்கும், இந்தியாவில் எம்.பி.பி.எஸ் படித்த டாக்டர்களே சிகிச்சையளித்துவிட முடியும். லண்டனில் இருந்து சிறப்பு மருத்துவர் ஏன் வரவழைக்கப்பட்டுள்ளார் என்ற கேள்வி தொடர்ந்து பல பொதுமக்களால் முன் வைக்கப்படுகிறது.
அப்பல்லோவின் இரண்டாவது, மூன்றாவது மருத்துவ அறிக்கையில் ஜெயலலிதா அப்பல்லோவில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் எனவும், அதிலும் குறிப்பாக மூன்றாவது அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு நோய் தொற்று என குறிப்பிட்டுள்ளது. இது கூடுதல் தகவலாகும். இன்பெக்ஷன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தாலும், எந்த மாதிரி இன்பெக்ஷன், அதன் தீவிரம் என்ன என்பதை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் இன்று மாலை நான்காவது அறிக்கையை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் தொடர் சிகிச்சையை அடுத்து உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கிருமி தொற்றுக்கான சிகிச்சை, சுவாச உதவி உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் சிகிச்சையை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
மேலும் முதல்வர் ஜெயலலிதா இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை: