என்னைக் காப்பாத்திட்டு மொத்தமா போயிட்டாங்களே: கதறும் ஆந்திர மாநில தொழிலாளி
சென்னை: சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமையன்று மாலையில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். நான்காவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில் குடும்பத்தினர் அனைவரையும் பறிகொடுத்துவிட்டு செய்வதறியாது திகைத்து வருகின்றனர் சில தொழிலாளர்கள். கணவனை இழந்த மனைவி, தந்தையை இழந்த மகன், அண்ணனை இழந்த தங்கை, மனைவியை இழந்த கணவன் என பலரின் கதறல் குரல்களும் கேட்டுக்கொண்டிருக்கின்றன.

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி அப்பல்லு தன் குடும்பத்தினர் அனைவரையும் கான்கிரீட் கட்டிட குவியலுக்கு பலி கொடுத்துவிட்டு கதறி அழுது கொண்டிருக்கிறார்.
சனிக்கிழமை நடந்த சம்பவத்தினை விவரித்த அவர், நாங்க குடும்பத்தோட இங்க வந்து வேலை செய்யுறோம். மதியம் வரைக்கும் நல்லா வெயிலடிச்சது. சாயந்திரமா இருட்டிட்டு வந்தது. திடீர்னு மழை கொட்டுச்சு. அப்போ, நான், என் அப்பா, அம்மா, மனைவி தவுடம்மா, தம்பி எல்லோரும் கட்டிடத்துக்கு உள்ளேதான் இருந்தோம்.
அப்போ, தினேஷ், அசோகன் ஆகிய இரண்டு சூப்பர்வைசர்கள் டீ வாங்கிட்டு வரச்சொன்னாங்க. மழை பெய்யுது என்னால போகமுடியாதுன்னு சொன்னேன்.
ஆனா, என்னோட அம்மாதான், போயி டீ வாங்கிட்டு வான்னு அனுப்பி வச்சாங்க. டீ வாங்கிட்டு திரும்பி வரும்போது, பெரிய சத்தம் கேட்டது கண்ணு முன்னாடி கட்டிடம் சரிய ஆரம்பிச்சது. கொஞ்ச நேரத்தில தரைமட்டமாயிருச்சு.
என்னோட அம்மாதான் கடவுளா இருந்து என்னை காப்பாத்திட்டாங்க. ஆனா என் குடும்பம் மொத்தமும் கட்டிடத்துக்குள்ள போயிட்டாங்களே என்று கூறி அவர் கதறி அழுதது காண்பவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
சனிக்கிழமை மாலையில் சம்பளம் வழங்கப்படும் நாள். கையில் பணத்தை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் மரணதேவனின் கைகளில் சிக்கி மண்ணோடு மண்ணாகிவிட்டனர் என்று உயிர் தப்பியவர்கள் கண்ணீருடன் கூறிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications