நாட்டிலேயே நம்ம சென்னை மாநகர பேருந்துகளில் தான் கூட்டம் அதிகமாம்!
சென்னை: நாட்டிலேயே சென்னையில் ஓடும் பேருந்துகளில் தான் கூட்டம் அதிகமாக உள்ளது என்று மத்திய போக்குவரத்து அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர பேருந்துகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவது புதிய விஷயம் அல்ல. ஆனால் நாட்டிலேயே சென்னையில் ஓடும் பேருந்துகளில் தான் கூட்டம் அதிகமாக உள்ளது என்று மத்திய போக்குவரத்து அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
2014-2015ம் ஆண்டில் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் 2.54 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 2.22 சதவீதம் அதிகம் ஆகும். 2014-2015ம் ஆண்டில் நாட்டிலேயே சென்னை மாநகர பேருந்துகள் தான் தினமும் கூடுதல் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளன.
அந்த ஆண்டில் சென்னையில் நாள் ஒன்றுக்கு ஒரு பேருந்தில் மட்டும் 1, 310 பேர் பயணம் செய்துள்ளனர். நாட்டிலேயே மிசோரம் மாநில போக்குவரத்து கழக பேருந்துகளில் தான் மிகவும் குறைவானோர் பயணித்துள்ளனர்.
சென்னை மாநகர பேருந்துகளில் 56.85 சதவீத பேருந்துகள் மிகவும் பழையனவாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய பேருந்துகளுக்கு பதில் புதிய பேருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பேருந்துகளின் அளவை அதிகரிக்க முடியாது, அதே போன்று புதிய வழித்தடங்களையும் அறிமுகப்படுத்த முடியாது என சென்னை மாநகர போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.