வாடகைக்கு குடியிருப்போர் விவரங்களை அளிக்க வேண்டும்.. வீட்டு ஓனர்களுக்கு சென்னை போலீஸ் உத்தரவு
சென்னையில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரங்களை அருகில் உள்ள காவல் நிலையங்களில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக சென்னையில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களின் விவரங்களை அதன் உரிமையாளர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் அடுத்த 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துளளனர்.
இதுதொடர்பாக சென்னை மாநகர போலீஸ் ஆணையர் விடுத்துள்ள உத்தரவில், மக்களின் பாதுகாப்புக்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தங்கள் வீடுகளில் வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரங்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் அதன் உரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்காக காவல் நிலையங்களில் தனி படிவம் உள்ளது. அதனை பெற்று எதிர்வரும் 15 நாட்களுக்குள்ளாக அருகில் உள்ள காவல் நிலையங்களில் வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரங்களை பெற்று அதன் உரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
சில வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீடுகளில் வாடகைக்கு குடியிருப்பவர்களின் பெயர் கூட தெரியாமல் உள்ளனர். இது சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது.
பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே வீடுகளில் தனியாக இருப்பவர்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்க இயலும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்கள் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவங்களை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு அண்டை வீட்டினரும் ஒருவருக்கொருவர் குற்றங்கள் நிகழா வண்ணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.
மேலும், வீடுகளிலும் சரி தொழில் நிறுவனங்களாக இருந்தாலும் சரி வேலைக்கு அமர்த்தும் முன்பு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் ஜார்ஜ்.












Click it and Unblock the Notifications