சென்னை ஜி.எச் பயிற்சி மருத்துவர்களின் ஸ்டிரைக் வாபஸ்
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் விமலாவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் பயிற்சி மருத்துவர்களின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மர்மநபர்களால் வெட்டப்பட்ட வில்லிவாக்கத்தை சேர்ந்த சக்திவேல் (26) என்பவரை நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அப்போது அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த டாக்டர்களிடம் (முதுநிலை மருத்துவ மாணவர்கள்) சக்திவேலுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும்படி கூறியுள்ளனர்.

அவர்கள் நோயாளி ஒருவரை பார்த்து முடித்த பிறகு வருவதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேலின் உறவினர்கள், மருத்துவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 4 பேரை மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்ய வேண்டும் என்று கூறி பயிற்சி மருத்துவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவர்களைத் தாக்கிய நபர்களைப் போலீசார் கைது செய்ய வேண்டும். அவசர சிகிச்சைப் பிரிவிற்கு ஆயுதம் ஏந்திய போலீசாரின் பாதுகாப்பு தேவை உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த மருத்துவமனை டீன் ஆர்.விமலா, போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக போராட்டக்குழுவின் தலைவரான கார்த்திக்கேயன் அறிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டீன் விமலா, ‘மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க போலீசார் உறுதி அளித்திருப்பதாகவும், மருத்துவர்களைத் தாக்கியதாக 4 பேரை போலீசார் கைது செய்திருப்பதாகவும்' அவர் தெரிவித்தார்.
ஆனால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது தற்காலிகமானது தான் என்றும், போலீசார் அளித்த உறுதிமொழியின் படி தொடர்ந்து பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனில் மீண்டும் போராட்டத்தைத் தொடர்வோம் என்றும் போராட்டக்குழுவின் தலைவர் கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications