ஜெயலலிதாவின் வாட்ஸ் அப்... வாய்ஸ் மெயில் வார்த்தைகள் மக்களுக்கு ஆறுதல் தருமா?
சென்னை: வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாட்ஸ் அப் மூலம் ஆறுதல் சொன்ன முதல்வர் ஜெயலலிதா இப்போது செல்போனில் வாய்ஸ் மெயில் மூலம் பேசி ஆறுதல் சொல்லி வருகிறார்.
தமிழகத்தில் வெள்ள பாதிப்புகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முதல்வர் ஜெயலலிதாவின் குரல்பதிவு கடந்த 2 தினங்களுக்கு முன், வாட்ஸ் அப் மூலம் வெளியானது. இதற்கான ஏற்பாடுகளை அதிமுகவின் தொழில்நுட்ப பிரிவு செய்தது. இந்நிலையில் அதே குரல்பதிவு தற்போது பிஎஸ்என்எல் கைபேசி வாடிக்கையாளர்களுக்கும் வாய்ஸ் மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு வரும் அழைப்பை எடுத்து பேசினால் அதில் முதல்வர் ஜெயலலிதாவின் குரல் ஒலிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

வணக்கம். உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன். கடந்த நூறு ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரும் தொடர் மழை ஏற்படுத்திய வெள்ளச் சேதங்களால் நீங்கள் அடைந்துள்ள துயரங்களை நினைத்து நினைத்து நான் வருந்துகிறேன். கவலை வேண்டாம். இது உங்கள் அரசு. எதையும் எதிர் கொண்டு வெல்லும் சக்தியை எனக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள். உங்களுக்காக நான், உங்களோடு எப்போதும் நான் இருக்கிறேன். விரைவில் இப்பெரும் துன்பத்திலிருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியும் எழுச்சியும் அடையச் செய்வேன். இது உறுதி.
போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் புனரமைப்புப் பணிகளையும் முழு வீச்சில் முடுக்கி விட்டிருக்கிறேன். அமைச்சர்களும், அரசு அலுவலர்களும், காவல் துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரும், முப்படையினரும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரும் மற்றும் தன்னார்வத் தொண்டர்களும் அயராது தோளோடு தோள் சேர்ந்து உங்களுடன் அயராது உழைத்தார்கள். உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன்.
எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது. எனக்கென்று உறவினர் கிடையாது. எனக்குச் சுயநலம் அறவே கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள்தான். என் இல்லமும் உள்ளமும் தமிழகம்தான். என் பெற்றோர் வைத்த ஜெயலலிதா என்ற பெயரை மறந்து போகும் அளவுக்கு, நீங்கள் அழைக்கின்ற அம்மா என்கின்ற ஒரு சொல்லுக்காகவே என் வாழ்நாட்களை உங்களுக்காக அர்ப்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த அரசு இயற்கைப் பேரிடர்களை வெற்றி கொள்வதில் எப்போதும் பெயர் பெற்ற அரசு என்பதை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டுவேன். எத்துயர் வரினும் அதையும் இத்தாயின் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். நன்றி -இவ்வாறு அந்த உரை முடிகிறது.முதல்வரின் உருக்கமான பேச்சு கட்சி பாகுபாடின்றி அனைவரையும் சென்றடைகிறது.
கடந்த சில ஆண்டுகளாவே காணொலி காட்சி மூலம் ஆட்சி நடத்துவதாக முதல்வர் ஜெயலலிதாவை திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலம் சென்று பார்வையிட்டதும் விமர்சனத்திற்கு ஆளானது.
பேரிடர் காலங்களில் வெளிநாடுகளில் உள்ள தலைவர்கள் தொலைக்காட்சியில் தோன்றி மக்களிடையே உரையாற்றுவார்கள். செய்தியாளர்களை சந்திப்பார்கள், இப்படி எதையுமே ஜெயலலிதா செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் மழை வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும் அவர்களுக்கு சரியான முறையில் நிவாரணம் வழங்காமல்,
இப்படி வாட்ஸ் அப்... வாய்ஸ் மெயில் மூலம் ஆறுதல் சொல்வது ஏன் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. வெள்ளம் வரும்முன்பே இப்படி வாட்ஸ் அப் எச்சரிக்கை விட்டிருக்கலாமே என்றும் அரசியல் கட்சியினரும், சமூக வலைத்தளவாசிகளும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications