மிதக்க விட்ட வெள்ளம்... சென்னையிலிருந்து சொந்த ஊருக்குப் போயிரலாமா.. யோசனையில் மக்கள்!
சென்னை: மழை வெள்ளம் மக்களை தெறிக்க விட ஐயோ... போதும்டா சென்னை வாழ்க்கை ஊருக்கு போய் பொழைச்சுக்கலாம் என்று முடிவுக்கு வந்திருக்கின்றனர் சமூகத்தின் கீழ்தட்டு நிலையில் வசிக்கும் ஏராளமானோர். புறநகரில் தாழ்வான பகுதிகளில் வீடு வாங்கியவர்களின் நிலையோ பரிதாபம், வாடகைக்கு குடியிருப்பவர்கள் பலரும் மேடான பகுதிகளை நோக்கி நகரத்தொடங்கியுள்ளனர்.
ஆளை விழுங்கும் வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்... மழை நீரோடு கழிவு நீர் கலந்து வர முகச் சுளிப்போடு அதில் நடக்க வேண்டிய அவலம் நேர்ந்து விட்டது சென்னை புறநகர்வாசிகளுக்கு. நகர்புறங்களிலும் வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, அடையாறு, கூவம் ஆற்றங்கரையோர மக்களின் வீடுகளும் வெள்ளத்தில் மிதக்கிறது. இவற்றை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை செய்தி சேனல்கள் ஒளிபரப்ப டிவியில் பார்க்கும் மக்கள் பரிதாபப்படுகின்றனர்.
சென்னை நகரில் வேலை பார்த்தாலும் நகருக்குள் வாடகை அதிகம் என்பதால், ஏராளமான மக்கள் திருவொற்றியூர், வில்லிவாக்கம், வேளச்சேரியின் ஒரு பகுதி, தாம்பரம் ஆகிய இடங்களில் குடியேறினர். ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரியில் இருந்தும் கூட விசாலமான வீடுகளை வாடகைக்கு பிடித்து தங்கி அங்கிருந்து புறநகர் ரயில் மூலம் சென்னைக்கு வேலைக்கு வருபவர்கள் ஏராளம்.
சமீபத்திய மழை வெள்ளம், அவர்களை மனதளவிலும், பொருளாதார ரீதியிலும் அதிகளவில் மிரட்டி இருக்கிறது. ஒருநாள் மழை இரவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்த மக்கள், பலரையும் சென்னைநகர, புறநகர வாழ்க்கை புரட்டிப்பு போட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
இதன் விளைவாக, இந்த பகுதிகளில் வாடகைக்கு குடியிருப்போர் அங்கிருந்து வெளியேறும் முடிவுக்கு வந்துள்ளனர். வீடுகள் மூழ்கியதில் தட்டுமுட்டு சாமான்களைக் கூட இழந்துவிட்ட வசதி இல்லாத, கீழ்தட்டு மக்கள் ஊரை விட்டே வெளியேறும் மன நிலைக்கு வந்துள்ளனர்.
புறநகரில் வீடு வாங்கியவர்கள்
கனமழை கற்றுக் கொடுத்த பாடம், புறநகரில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் பெருமளவு முடங்கும் அபாயம் உள்ளது.
தாம்பரம், சிட்லபாக்கம், கிருஷ்ணா நகர், முடிச்சூர், வளசரவாக்கம், நொளம்பூர், போரூர், ராமாபுரம், மவுலிவாக்கம்,
கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் என, பல்வேறு பகுதிகளில், வீடுகளை வாங்கி வாடகைக்கு விட்டுள்ளவர்கள் நிலை பரிதாபமாக உள்ளது.
வாடகை வீடுகளின் நிலை
கனமழையால், வேளச்சேரி, தரமணி, மடுவாங்கரை, ஆதம்பாக்கம், நிலமங்கை நகர் பகுதிகளில், ஆயிரக்கணக்கான வீடுகளில் மழைநீர் புகுந்தது. முக்கிய பொருட்களை உயரமான இடங்களில் வைத்துவிட்டு, உடைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கினர். தெருக்களில் நீர் வற்றியதை அறிந்து, வீடு திரும்பியவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் தேங்கிய நீரை வெளியேற்ற, பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து, வீட்டை சுத்தம் செய்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை
தரைத் தளத்துடன் இரண்டு மாடி வீடு கட்டியோரில் பெரும்பாலோர், தரை மற்றும் முதல் மாடியை வாடகைக்கு விட்டு, இரண்டாவது மாடியில் வசிக்கின்றனர். தரைத் தளத்தில் குடியிருந்த பலர், வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டனர். வீட்டில் புகுந்த நீரை வெளியேற்றும் பணியை, வாடகைதாரர்களிடம் விட்டுவிட்டதால், வீட்டு உரிமையாளர்கள் மீது வாடகைதாரர்கள், கடும் அதிருப்தியடைந்துள்ளனர். வீட்டை காலி செய்ய, அதுவும் பிரதான காரணமாக கூறப்படுகிறது.
காலி செய்ய முடிவு
இந்த நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட, வேளச்சேரி, நிலமங்கை நகர், மடுவாங்கரை பகுதிகளில், வாடகைக்கு குடியிருந்தோரில் பலர், வீட்டை காலி செய்து விட்டு மேட்டுப்பாங்கான பகுதிகளில் குடியேற முடிவு செய்துள்ளனர். அதனால், பல வீடுகளில், 'வீடு வாடகைக்கு' பலகைகள் தொங்கவிடப்பட்டு உள்ளன. ஆனால், குத்தகை முறையில் குடியிருந்தோருக்கு, பணம் திரும்ப கிடைப்பதில் சிக்கல் இருப்பதால், சில மாதங்கள் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சொந்த ஊர் திரும்ப முடிவு
தாம்பரம் அதன் சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களை இந்த மழை வெள்ளம் ரொம்பவே மிரட்டி இருக்கிறது. ஆண்டுதோறும் இதுபோல மழை வந்தால் தங்களால் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளனர். அதனால், வாடகை வீடுகளில் இருந்து காலி செய்து, தங்கள் சொந்த ஊர் உள்ள தென்மாவட்டங்களுக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர்.
நகர்பகுதிகளிலும் பாதிப்பு
புறநகர் மட்டுமல்ல நகர்பகுதியான வில்லிவாக்கம் சிட்கோ நகரில், சிலபகுதிகளில் இன்னும் மழை வெள்ளம்வடியவில்லை. வடிந்த இடங்களிலும், வீடுகளை சுத்தம் செய்து குடியேறுவதில், பொருளாதார சிக்கல் உட்பட பல சிக்கல்கள் நிலவுகின்றன. பல இடங்களில் வாடகைக்கு வசித்தோர், வீடுகளை காலி செய்து சென்று விட்டதாக, வீட்டின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிராமத்தை தேடி
திருவொற்றியூரில் வசிப்போர், கடந்த 20 ஆண்டுகளாக இந்த பிரச்னையை எதிர்கொள்கின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு இந்த முறை அவர்களில் கணிசமானோர் அந்த பகுதியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். அங்கு தங்கியுள்ள இளைஞர்கள், தங்கள் சொந்த ஊருக்கே திரும்ப முடிவு செய்துள்ளனர்.
சொந்த ஊரின் அருமை புரிந்தது
சென்னை என்றால் தார் சாலை, அடிப்படை வசதி இருக்கும் என, நினைத்தேன். ஆனால், மழையால் சென்னையின் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அதன் உண்மை முகம் தெரியவந்தது. வீதிகளில் தேங்கியுள்ள மழைநீரால், வீட்டை விட்டு அடுத்த தெருவிற்கு கூட, போக முடியவில்லை. மழைநீருடன் கழிவுநீர் கலந்து, சாலைகளில் தேங்கி கிடக்கிறது. பார்க்கவே அருவெறுப்பாக உள்ளது. இப்போதுதான் சொந்த ஊரின் அருமை தெரிந்துள்ளது என்று கூறி வருகின்றனர் கிராமத்தை விட்டு சென்னை நகருக்கு வந்த இளைஞர்கள்.
சென்னையில் பெய்த மழை மக்களின் மனநிலையை எப்படி எல்லாம் மாற்றியிருக்கிறது பாருங்களேன்!