சென்னையை கண்ணீரில் மிதக்க விட்ட மாமழை.. நவம்பரை உலுக்கிய சென்னை வெள்ளம்!
சென்னை: 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னைக்கு போதாத காலமாக அமைந்தது. நவம்பர் 8ம் தேதி தொடங்கி டிசம்பர் இரண்டாவது வாரம் வரை வெளுத்தெடுத்து விட்டது பேய் மழை. மாநகரமே சிக்கி சின்னாபின்னமான ஆண்டு இது.
வேறு எந்த நிகழ்வையும் விட இந்த மாமழைதான் நவம்பர் மாதத்தின் மிக முக்கிய நிகழ்வாக தமிழக மக்களுக்கு அமைந்து விட்டது.

பீகாரில் நிதீஷ் குமார் - லாலு பிரசாத் கூட்டணி மிகப் பெரிய வரலாறு படைத்ததும் இந்த மாதத்தில்தான்.
விருதைத் தர மாட்டேன்- கமல்
நவம்பர் 3ம் தேதி, நான் எனக்கு அளிக்கப்பட்ட விருதுகளைத் திருப்பித் தர மாட்டேன் என்று அறிவித்தார் கமல்ஹாசன்.
நாராயணனுக்கு செருப்படி
நவம்பர் 4ம் தேதி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் ஆளுநரும், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான எம்.கே.நாராயணனுக்கு செருப்படி விழுந்தது. பிரபாகரன் என்ற ஈழத் தமிழர் கைது செய்யப்பட்டார்.
வைகோ தாயார் மரணம்
நவம்பர் 6ம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் மரணமடைந்தார்.
நிதீஷ் கூட்டணி வெற்றி
நவம்பர் 8ம் தேதி பீகாரில் நடந்த சட்டசபைத் தேர்தலில் நிதீஷ் குமார் - லாலு பிரசாத் இணைந்து அமைத்த மெகா கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றது. நிதீஷ் குமார் மீண்டும் முதல்வரானார். லாலுவின் இரு மகன்களும் அமைச்சர்களானார்கள். இளைய மகன் துணை முதல்வரானார்.
மேகிக்குத் தடை முழுமையாக நீங்கியது
நவம்பர் 9ம் தேதி நாடு முழுவதும் தடை செய்யப்பட்டிருந்த நேகி நூடுல்ஸ் 5 மாத தடைக்காலத்திற்குப் பின்னர் நவம்பர் 9ம் தேதி மீண்டும் விற்பனைக்கு வந்தது.
சீனிவாசன் நீக்கம்
நவம்பர் 9ம் தேதி ஐசிசி சேர்மன் பதவியிலிருந்து என். சீனிவாசன் நீக்கப்பட்டார். அவரது இடத்திற்கு பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர் அறிவிக்கப்பட்டார்.
பாரீ்ஸ் தாக்குதல்
நவம்பர் 13ம் தேதி பாரீஸில் நடந்த மிகப் பெரிய தீவிரவாதத் தாக்குதலில் 120க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பாரீஸ் மட்டுமல்லாமல் வடக்கில் உள்ள செயின்ட் டெனிஸ் நகரிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
வெள்ளத்தில் மிதந்தது சென்னை
நவம்பர் 15ம் தேதி தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை பேயாட்டம் போட்டதில் வட மாவட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. விடிய விடிய பலத்த மழை கொட்டியதில் சென்னை - திருச்சி நெடுஞ்சாலை ஸ்தம்பித்தது. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. நகரமே ஸ்தம்பித்துப் போனது.
உயர்நீதிமன்றத்திற்கு தொழிலக படை பாதுகாப்பு
நவம்பர் 16ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியை தொடங்கினர்.
பித்துக்குளி முருகதாஸ் மரணம்
நவம்பர் 17ம் தேதி பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் மரணமடைந்தார்.
சகாயம் அறிக்கை
நவம்பர் 23ம் தேதி மதுரை மாவட்ட கிரானைட் மோசடி தொடர்பாக தனது விசாரணை அறிக்கையை சகாயம் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
ஆமிர் கான் கருத்தால் சர்ச்சை
நவம்பர் 24ம் தேதி நாட்டில் சகிப்புத்தன்மை இன்மை அதிகரித்து வருவதாக கூறி நடிகர் ஆமிர்கான் தெரிவித்த சில கருத்துக்கள் நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது.
மீண்டும் திமுகவில் அனிதா
நவம்பர் 26ம் தேதி அனிதா ராதாகிருஷ்ணன், திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து மீண்டும் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications