செப்.6 முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்... சென்னை ஹைகோர்ட் அதிரடி!
Recommended Video
சென்னை : புதன்கிழமை முதல் தமிழகத்தில் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கியது தமிழக அரசு. இதனை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுகுமார் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது தனி நீதிபதி துரைசாமி, செப்டம்பர் 5ம் தேதி வரை அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பதை கட்டாயப்படத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டார். இந்நிலையில் இது தொடர்பாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த பொதுநல மனு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மனுவும் விசாரணைக்கு ஏற்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது மோட்டார் வாகன சட்டம் 130படி அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் காட்ட வேண்டும் என்று உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் சாலை விபத்துகளில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளதால் இதனை கட்டுப்படுத்தவே அரசு இந்த உத்தரவை பிறப்பித்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
இதனையடுத்து வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்போது தமிழக அரசு தங்கள் தரப்பு பதிலை மனுவாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அசல் வாகன உரிமம் வைத்திருக்க கட்டாயமில்லை என்று நீதிமன்றம் விதித்த தடை நாளையுடன் முடியும் நிலையில், இந்தத் தடையை நீட்டிக்க தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது. எனவே, புதன்கிழமை முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் கொண்டு செல்வது கட்டாயமாகியுள்ளது.
அரசு தாக்கல் செய்யும் பதிலை பொறுத்தே அடுத்த கட்ட முடிவை அறிவிக்க முடியும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கூறிவிட்டது.