தமிழக அரசை டெல்லியிலிருந்து சிலர் இயக்குகிறார்கள்: ஹைகோர்ட்டில் தவே அதிரடி வாதம்
Recommended Video
சென்னை: தகுதி நீக்கத்தை ரத்து செய்யக் கோரி, தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
மதியம் 12.15 மணியளவில் ஹைகோர்ட்டில் நீதிபதி துரைசாமி முன்னிலையில் விசாரணை தொடங்கியது. கபில் சிபில், சல்மான் குர்ஷித், ராகேஷ் திரிவேதி, அரிமா சுந்தரம், துஷ்யந்த் தவே போன்ற நாடறிந்த சீனியர் வழக்கறிஞர்கள் இந்த வழக்குகளில் வாதி, பிரதிவாதிகள் தரப்பில் ஆஜராவதால் ஹைகோர்ட் வளாகமே பரபரப்போடு காணப்பட்டது.
தினகரன் தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே முதலில் வாதிட்டார். அவர் கூறுகையில் "தமிழக அரசை டெல்லியில் இருந்து சிலர் இயக்குகிறார்கள். தமிழக அரசியல் சூழ்நிலை டெல்லியில் சிலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.
சபாநாயகர் தரப்பு எதிர்ப்பு
இதற்கு சபாநாயகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிமா சுந்தரம் எதிர்ப்பு தெரிவித்தார். நீதிமன்றத்தில் மத்திய அரசை குறைகூறுவது கூடாது. வழக்கிற்கு சம்மந்தம் இல்லாத வாதம் முன்வைக்கப்படுகிறது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
முதல்வரை மாற்ற மனு
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து 19 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சட்டசபை தலைவர் தனபாலிடம் புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் 19 எம்.எல்.ஏ.க்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.
எம்எல்ஏக்கள் பதவி நீக்கம்
இதனிடையே, கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதாக திடீரென தெரிவித்து அணி மாறினார். இதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல் உள்பட 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டார். 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் அரசிதழிலும் வெளியிடப்பட்டு அவர்கள் வகித்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று விசாரணை
இதையடுத்து எம்எல்ஏ வெற்றிவேல் உள்பட 18 சட்டசபை உறுப்பினர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி முன்பு ஆஜராகி, தகுதி நீக்கத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் எனக் கோரினார். மனுவைத் தாக்கல் செய்யக் கூறிய நீதிபதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு புதன்கிழமை வருகிறது. எனவே அந்த மனுவுடன் சேர்த்து இந்த மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.
அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு
இதையடுத்து வெற்றிவேல் உள்பட 18 பேர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கை சட்டப்படி செல்லத்தக்கது அல்ல. அவரது நடவடிக்கை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாதத்தை கேட்டறிந்த பிறகு, இந்த வழக்கை நீதிபதி அக்டோபர் 4ம் தேதிவரை தள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.