நவ. 17-க்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு
வரும் நவம்பர் மாதம் 17-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தலை வரும் நவம்பர் மாதம் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 நகர பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த உள்ளாட்சிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது.

உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இதுதொடர்பாக சென்னை ஹைகோர்ட்டில் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழகத்தில் வரும் மே மாதம் 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனினும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் காலதாமதமாகும் என்று மாநில தேர்தல் ஆணையம் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தது.
இந்நிலையில் திமுக தொடர்ந்த அந்த வழக்கின் மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு உள்ளாட்சி தேர்தலை நவம்பர் மாதம் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசுக்கும் அதற்கான அறிவிக்கையை செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிடப்பட்டது.
மேலும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை மேற்கொள்ள இருப்பதால் உள்ளாட்சி தேர்தல் நடத்த இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்று தமிழக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications