துப்பாக்கிச் சூட்டில் பலியான 6 பேருக்கு உடற்கூறாய்வு செய்யலாம்- ஹைகோர்ட்
துப்பாக்கிச் சூட்டில் பலியான 6 பேருக்கு உடற்கூறாய்வு செய்யலாம் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: துப்பாக்கிச் சூட்டில் பலியான 6 பேரின் உடல்களை உடற்கூறாய்வு செய்யலாம் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது பேரணி நடத்த முயன்ற மக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சாட்சியங்கள் அழிக்க நேரிடும் என்பதால் தனியார் மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.
அதன்படி துப்பாக்கிச் சூடு குறித்து சந்தேகம் நிலவுவதால் 13 பேரில் 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய கூடாது என்றும் மீதமுள்ள 7 பேரின் உடல்களுக்கு மறு உடற்கூறாய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் பி.டி. ஆஷா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 6 பேரின் உடல்களை உடற்கூறாய்வு செய்யலாம்.
உடற்கூறாய்வுக்கு விதித்த தடை நீக்கப்படுகிறது. உடற்கூறாய்வுக்கு பின்னர் 6 பேரி்ன் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கலாம். உடற்கூறாய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும். உடற்கூறாய்வின் போது எடுக்கப்படும் துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
எவ்வளவு விரைவில் உடற்கூறு ஆய்வு செய்ய முடியுமோஸ அவ்வளவு விரைவில் செய்ய வேண்டும். மணிராஜ், அந்தோணி செல்வராஜ், கிளாட்சன், ஜெயராமன், ரஞ்சித்குமார், ஜான்சி ஆகியோருக்கு உடற்கூறாய்வு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் இறந்தோரின் உடல்களை அடையாளம் காண உறவினர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். திருவனந்தபுரம், எய்ம்ஸ் மருத்துவர்கள் கண்காணிப்பில் உடற்கூறாய்வு செய்யப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.