ஆர்.கே நகரில் 5,117 போலி வாக்காளர்கள் விவகாரம் : ராஜேஷ் லக்கானி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
ஆர்.கே நகரில் போலி வாக்காளர்கள் நீக்கம் குறித்து பதிலளிக்க ராஜேஷ் லக்கானிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை : ஆர்.கே நகர் தொகுதியில் 5117 போலி வாக்காளர்கள் நீக்கப்படாதது குறித்து தி.மு.க சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்கும் வரை தேர்தல் நடத்தத் தடை கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் 45,999 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், டிச.31-க்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த வேண்டும், நீக்கப்பட்டவர்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இந்நிலையில், ஆர்.கே நகரில் வருகிற 21ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு மேலும் 5 ஆயிரத்து 117 போலி வாக்காளர்கள் நீக்கப்படவில்லை என்றும், அவர்களையும் நீக்க வேண்டும் என்றும் தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் சார்பில் வழக்கறிஞர் வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், இதுகுறித்து வருகிற திங்கட்கிழமை அன்று பதில் அளிக்க வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications