‘பீட்டா’ இணையதளத்தில் ஆபாசப் படம்.. தடை விதிக்க முடியாது... சென்னை ஐகோர்ட் மறுப்பு
ஆபாச படம் வெளியாகும் பீட்டா அமைப்பின் இணையதளத்திற்குள் ஏன் செல்கின்றீர்கள் என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளனர். பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரிய வழக்கையும் அவர்கள் தள்ளுபடி செய்தனர்.
சென்னை: பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த தினேஷ், சென்னை ஐகோர்ட்டில் பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவர் செய்திருந்த மனுவில், பீட்டா என்ற விலங்குகள் நல அமைப்பு இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.
மேலும், வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தின் மூலம் செயல்படும் இந்த அமைப்பின் கிளை மும்பையில் செயல்பட்டு வருகிறது என்றும், பீட்டா அமைப்பின் இணையதளத்தில், போராட்டம் என்ற பெயரில் ஆபாச படங்களை பீட்டா வெளியிட்டு வருகிறது என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது. எனவே, இந்தியாவில் சட்டவிரோதமாக செயல்படும் பீட்டா அமைப்பை தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'பீட்டா அமைப்பின் இணையதளத்தில் ஆபாச படம் வெளியானால், அதை பார்க்காதீர்கள். ஏன் அந்த இணையதளத்துக்குள் செல்கிறீர்கள்?' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு, விலங்குகள் நலன் என்பதால் குழந்தைகள் இணையதளத்திற்குள் சென்றுவிடுகின்றனர் என்று மனுதாரரின் வழக்கறிஞர் பதில் அளித்தார்.
விசாரணையின் முடிவில், ஆபாச படம் வெளிநாடுகளில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் இதுதொடர்பாக ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான சட்டம் இருக்கிறது என்றும் கருத்து கூறிய நீதிபதிகள், விளம்பர நோக்கத்தோடு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.